18 - நிலாத் தூறல்!

வேண்டாம் விதவைக் கோலம் !

பல வர்ண நிறங்கொண்டு
பட்டு உடுத்தி நின்றவளுக்கு…

வெள்ளை மலர் தூவி
இங்கே விதவைக் கோலம்
பூண்டது யார்…?

கனவுச் சாம்ராஜ்ஜியத்துக்குள்
தினமும் உலா வந்தவளை
கனவுகளைச் சிதைத்தெறிந்து
கண் கலங்க வைத்தது யார்…?

சிரித்து மகிழ்ந்து
சிறகடித்த பறவையை
சின்னாபின்னமாக்கி
சிறை வைத்தது யார்…?

பொறுமையின் சிகரத்திற்கு
வெறுமையைக் கொடுத்து
மல்லிகை மலர் பறித்து
மலருக்கு முட்கள் கொடுத்தது யார்…?

இந்த மலரின் விடியல் மட்டும்
வழியும் கண்ணீர்த் துளிகளோடா…?

வேண்டவே வேண்டாம்
இந்த வெள்ளை உடையணியும்
விதவைக் கோலம்
இனி வேண்டவே வேண்டாம்!

அந்த மின் குமிழ்களின்
ஒளித் தெறிப்பில்
பட்டுத் தெறிக்கும்
நிறங்களைக் கொண்டு
வெள்ளாடை கிழித்தெறிந்து
வர்ணங்கள் பூசுங்கள்!

விடியும் பொழுதெல்லாம்
இனி இவளுக்கு
வெளிச்சமாகவே இருக்கட்டும்!

 

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3705&st=0#entry45326


உங்களோடு வலம் வரும்

*** இவள் - சத்தியா ***
user posted image