அழகாகப் புலர்ந்தது… அன்றைய காலைப் பொழுது. அன்றைய தினம் அரவிந்தின் பிறந்த நாள். அவனின் பிறந்த நாள் என்பதால் கோயிலுக்குச் சென்று வர ஆயத்தமானாள் சாந்தி. அப்போது வாசலில் சயிக்கில் மணிச் சத்தம் ஒலிக்க… வெளியே எட்டிப் பார்த்தாள்.“அம்மா போஸ்ற்”… என்றபடி அங்கே நின்றான் தபால்காரன்.
உடனே கதவைத் திறந்து கொண்டு ஓடிப்போய் கடிதத்தை வாங்கிய சாந்தியும், அந்தக் கடிதத்தை ஆவலாய்ப் பார்த்தாள். ம்… அழகான கையெழுத்துடன், அது அரவிந்திடம் இருந்து வந்திருந்தது. கடித்தத்தைக் கண்டதும் மனதுக்குள் சந்தோசம் கொப்புளிக்க… அதைப் பிரித்தாள்… உள்ளே அரவிந்தினுடையை படங்கள்.
ஓடிச் சென்று கதைவைத் தாளிட்டுக் கொண்டவளும், கட்டிலில் கிடந்தவாறு ஒவ்வொரு படமாக எடுத்து ரசித்த வண்ணம்… கண்கள் சொக்கி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அந்த வேளை அங்கே அலறியது ரெலிபோன். எழுந்து ரெலிபோனை எடுத்தவளும்….
“ஹலோ”… என்றாள்.
“ஹலோ… சாந்தி டார்லிங்”…. மறு முனையில் அரவிந்.
“ஹாய் அரவிந்!… என் அரவிந்துக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்… இன்று போல் என்றும் சந்தோசமாய்… நீடூழி காலம் வாழ வேணும் எண்டு கடவுளை நானும் வேண்டிக் கொள்ளுறன்.”
“நன்றி சாந்தி!… உன்னிடம்தான் முதன் முதலில் வாழ்த்தைப் பெற வேணும் எண்டு நினைச்சுத்தான் யாரோடும் கதைக்காமல் முதலில் உனக்குப் போன் எடுத்தன். ம்… எப்படி இருக்கிறாய்?…என்ன செய்து கொண்டிருக்கிறாய்…?”
“ம்… நானா…? இண்டைக்கு நான் ரொம்ப ரொம்பச் சந்தோசமாக இருக்கிறன்”…
“ஏனடி…?”
“ஓ!… அதுவா? இண்டைக்கு என் மன்னவனின் பிறந்த நாள் ஆச்சே. அதுதான் சந்தோசம். கோயிலுக்குப் போய் வருவம் எண்டு வெளிக்கிட்டன். அந்த நேரம் பார்த்து தபால்காரன் வந்தான். பார்த்தால் உங்கட போட்டோ எல்லாம் வந்திச்சு. அதைப் பார்த்துக் கொண்டிருக்க… நீங்களும் போன் எடுத்தீங்கள்… எல்லாம் ஒரே சந்தோசம்தான்.”
“போட்டோ எல்லாம் வந்திட்டா சாந்தி? சரி… சரி… போட்டோவில் நான் எப்படி இருக்கிறன்?”
“ம்… நல்ல அழகாய்த்தான் இருக்கிறீங்கள்.”
“உனக்குப் பிடிச்சிருக்கா…?”
“ம்… ம்… நிறையப் பிடிச்சிருக்கு.”
“என்ன பிடிச்சிருக்கு…?”
“உங்கட அமைதியான அந்த அழகான முகம், கருமையான மீசை, கட்டான உடம்பு, அடர்த்தியாய் சுருண்டு தொங்கும் அந்த தலை முடி, அழகான உடை…. ம்… இப்படி எல்லாமே பிடிச்சிருக்கு அரவிந்.”
“அப்படி எண்டால்… என்னை உனக்கு நிறையப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லுறாய்.”
“ம்… உங்களை எனக்கு நிறையவே பிடிச்சிருக்கு அரவிந். உங்கள் அன்பிற்கு, அழகுக்கு, பணத்துக்கு முன்னால நான் எப்படி…?”
“ஏன் சாந்தி … உனக்கு என்ன குறை? நீ வெள்ளை இல்லாட்டிலும் உன் உள்ளம் நல்ல வெள்ளையாச்சே. நீ பொது நிறம் எண்டாலும் நல்ல அழகாய்த் தானே இருக்கிறாய்? அந்த நிலாவைப் போல அழகான வட்ட முகம், நல்ல கருமையாய் நீண்ட தலை முடி, மீன் போன்ற விழிகள்… இவை எல்லாத்தையும் பார்க்கும் போது… நீ நடிகை ராதாவைப் போல இருக்கிறாய்.”
“சும்மா சொல்லாதீங்கோ. நான் நடிகை ராதாவைப் போலா இருக்கிறன்? நீங்கள் நல்லாப் பொய் சொல்லு றீங்கள்? ம்கூம்… எனக்கெண்டால் அப்படித் தெரியவே இல்லை. அரவிந்!… உண்மையாய்… என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
“ம்… நான் என்ன பொய்யே சொல்லப் போறன்?… என் நண்பன் கூட உன் போட்டைவைப் பாத்திட்டு அப்ப டித்தான் சொன்னான். உன்னைப் பாத்தால் நடிகை ராதாவின் சேப் அடிக்குது எண்டு. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு எண்டால் பிடிச்சிருக்குத்தான்.”
“அரவிந்!… உங்களுக்கு ஒன்று தெரியுமா? அப்பா வெளிநாட்டு மாப்பிள்ளை எண்டதும் முதலில் நான் வேண்டாம் எண்டே சொல்லிப் போட்டன்.”
“ஏன் சாந்தி? எதுக்கு அப்படிச் சொன்னாய்?”
“இல்லை அரவிந்… என்ர சினேகிதி ஒருத்திக்கு இப்ப டித்தான்… வெளி நாட்டு மாப்பிள்ளையைப் பேசி… மாப்பிள்ளைக்கும் பெண்ணைப் பிடிச்சுப் போய், பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சுப் போய்… கடைசியில் எல்லோரின் விருப்பத்தோடும் அவள் அங்க போய் இறங்கினா… மாப்பிள்ளைக்கு அவளைப் பிடிக் கேல்லையாம். அவள் அழகாய் இல்லை என்று நெடுக கொடுமைப் படுத்துவானாம். அவளை எங்குமே கூட்டி யும் போக மாட்டானாம். கடைசியில் அவள் அதை எல்லாம் தாங்க ஏலாமல் ஒரு பிள்ளையோட அவனை விட்டுப் பிரிஞ்சு போய் இருக்கிறாள். அதை எல்லாம் அறிஞ்சதால எனக்கும் ஒரே பயம். அதைவிட அப்பா, அம்மா, சகோதரிகளை பிரிஞ்சு வாழவும் விரும்ப மில்லை. அதாலதான் வேண்டாம் எண்டு சொன்னன் அரவிந்.”…
“அவனுக்கு விசர் போல. அழகில என்ன இருக்கு? இப்படிப்பட்டவங்களை எல்லாம் நிக்க விட்டு சுட வேணும். சாந்தி!… அம்மா, அப்பாவை எல்லாம் விட்டுட்டு தனியே வாறன் எண்டு நீ ஒண்டுக்கும் கவலைப்படாத… உனக்கு எல்லாத்துக்குமா சேர்த்து நான் முழுசா இருக்கிறன் இல்லையா? பிறகு எதுக்கு நீ கவலைப்பட வேணும்?”…
“அது போதும் அரவிந். நான் உண்மையில் போன பிறப்பில் ஏதோ புண்ணியம் செய்துதான் இருக்கிறன். அதுதான் எனக்கு நல்ல புரிந்துணர்வுள்ள கணவனா உங்களைக் கடவுள் தந்திருக்கிறார்.”
“அப்படி இல்லை சாந்தி. நீ எனக்கு மனைவியாய் கிடைக்க நான்தான் கொடுத்து வைத்திருக்க வேணும். நிறத்தில, அழகில என்ன இருக்கு? முதலில் நல்ல மனம் இருக்க வேணும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறன்.”…
“நானும் அதையேதான் எதிர்பார்க்கிறன்… அரவிந்!.. நீங்கள் காரோடு சாய்ந்து நின்று கொண்டு எடுத்து அனுப்பின போட்டோ இன்னும் நல்ல அழகாக இருக்கு. அது உங்கட காரா?”…
“பின்ன என்ன?… இரவல் காருக்கு முன்னால நிண்டா போட்டோ எடுக்கப் போறன்? அது என் கார்தான். சாந்தி!… என்ர வீடு எப்படி இருக்கு?”…
“இதுவா நீங்கள் இருக்கும் வீடு? ஆ!… பெரிய மாளிகை போல இருக்கே?”…
“ம்… இந்த வீடுதான் என் மகாராணி வாழப் போற மாளிகை. மகாராணியின் வரவுக்காய் காத்துக் கிடக் கிறது இந்த அரண்மனை. மகாராணி எப்போ வந்து வலது காலை வைக்கப் போறாவாம்?”…
“எனக்கு மட்டும் விரைவாய் வந்து சேர விருப்பமில் லையா என்ன? ஆனால் இன்னமும் அந்த நல்ல நாள் வந்து சேரவில்லையே? எப்போ அரவிந் எல்லாம் சரிவரும் ?… இன்னமும் கன காலம் செல்லுமா?”…
“அந்த அலுவல்கள் எல்லாத்தையும்தான் நானும் ஓடி ஓடி பார்த்துக் கொண்டிருக்கிறன். எல்லாம் வெகு விரைவில் சரி வந்து விடும். நீ ஒண்டுக்கும் கவலைப் படாத சாந்தி. ஓகே? சரி… நீ கோயிலுக்கு போக வெளிக் கிட்டன் என்று சொன்னாய்.. போகேல்லையா சாந்தி…?”
“போக வெளிக்கிட்டன்தான்… ஆனால் இப்போ போக மனமே இல்லாமல் இருக்கு அரவிந்.”…
“ஏன் சாந்தி…?”
“நான் கோயிலுக்குப் போக வெளிக்கிட… கண்முன்னே தரிசனம் தந்திருக்கு உங்கட போட்டோ, அதுக்குப் பிறகு உங்கட ரெலிபோன்… ம்… என் கடவுளே நேரில வந்து காட்சி தந்த பிறகு… நான் எதுக்கு போக வேணும்?… எனக்கு மனமே இல்ல அரவிந். இப்படியே உங்களோட கதைச்சுக் கொண்டிருக்க வேணும் போல இருக்கு…”
“ஓ!… அப்படியா?… சரி நாளைக்கும் கதைக்கலாம் தானே சாந்தி? இண்டைக்கு அந்தச் சாமியையும் ஒரு தடவை தரிசனம் பண்ணிக் கொண்டு வா… இல்லாட்டி என்மேல அந்தச் சாமி கோவிச்சாலும் கோவிச்சுடும்.”
இப்படி நேரம் போவதே தெரியாமல் அவர்கள் உரையா டல்கள் தினமும் தொடர்ந்த வண்ணம் இருக்க… நாளும் பொழுதும் அவன் நினைவிலேயே மூழ்கித் தவித்திருந்த அவளின் மனதுக்குள் பல்லாயிரக் கணக்கான பட்டாம் பூச்சிகள் இறக்கைகள் கட்டிப் பறந்திருந்த வேளை….
தொடரும்…..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4733
