
விடை பெறச் சொல்கிறாயா…?
அந்த உணவுச்சாலையின் ஓர் ஒதுக்குப் புறமாய் இருந்த அந்த இருக்கையில் அமர்ந்திருந்த சுருதியின் கண்களிருந்து பொல பொலவென விழுந்த ஒவ்வொரு கண்ணீர்த் துளிகளிலும்… அவள் இன்றுவரை வளர்த்த கனவுகள், கற்பனைகள், ஏக்கங்கள். எதிர்பார்ப்புக்கள். ஆசைகள் எல்லாமே சிதறி விழுந்தன.
அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைக் கண்டு துடித்த சுரேன்… அதை துடைக்க முயன்ற போது… அவனின் கையைத் தடுத்தவளாய் விம்மி விம்மி அழத் தொடங்கினாள் சுருதி.
“சுருதி ஏனம்மா அழுகிறாய்? உன்ன நான் மறந்திட்டன் எண்டு நினைச்சியா? இல்லம்மா சுருதி. ஆறு வருசமா உன்ன எங்கெல்லாம் தேடினன் தெரியுமா? கடிதத்துக்கு மேல கடிதம் போட்டன். எதுக்குமே உன் பதில் இல்ல. உன் பதில் வருமென எதிர்பாத்தன். என் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே ஏமாற்றமாய்ப் போச்சு. கடைசியிலதான் அறிஞ்சன்…. செல் வீச்சில உன்ர வீட்டோட உன்ர குடும்பமே அழிஞ்சு போனதாய். எப்படி நான் துடிச்சுப் போனன் தெரியுமா? என்னால நம்பவே முடியேல்ல…
அண்டைக்குத் தொடக்கம் ஒரு பைத்தியக்காரனாய்தானம்மா திரிஞ்சன். ஆறு வருசங்கள் எப்பிடி ஓடிச்சோ தெரியேல்ல. உன்ர நினைவுகளோட காலங்களக் கடத்தினன். கடைசியில என்ர அம்மாட வற்புறுத்தலால…. அம்மா விட்ட கண்ணீராலேயும்தான் போன மாதம்தான் அம்மா பார்த்த பெண்ண கல்யாணம் முடிச்சுக் கொண்டு திரும்பினன். அது கூட எனக்காக இல்லம்மா சுருதி. அதுவும் கூட என்ர அம்மான்ர சந்தோசத்துக்காகத்தான்.
சுருதி நீ நம்புவியோ தெரியாது. நான் கொழும்புக்கு வந்த அடுத்த நாளே உன்ர வீட்டத் தேடியே என்ர கால்கள் நகர்ந்தன. உன்ர வீடிருந்த இடத்தில எல்லாம் ஒரே காடு. அக்கம் பக்கம் எல்லாம் விசாரிச்சன்… அவங்களும் அப்பிடித்தான் சொல்லிச்சினம்…
நடந்தவை யாவற்றையும் வேதனையோடு கொட்டித் தீர்த்தான் சுரேன்.
அப்போதும் சுருதி தலையைக் குனிந்தபடியே அழுது கொண்டே இருந்தாள். சுரேன் தொடர்ந்தான்…
“சுருதி உன்ன அம்மன் கோயிலுக்குள்ள கண்டதாக என்ர நண்பன் சொன்னதும் நான் பட்ட சந்தோசத்துக்கு அளவே இல்லயம்மா. அந்த அம்மனை நான் நேரில கண்டது போல சந்தோசப்பட்டன். அது உனக்குத் தெரியுமா? ம்… அந்த சந்தோசத்தோடேயே உடன வேலை இடத்துக்குப் போய்… முதலாளியிடம் அவசர தேவை என்று சொல்லி… லீவை எடுத்துக் கொண்டு உன்ன பாக்க ஓடி வந்திட்டன் சுருதி. ம்… இனி உன்ன விட்டுட்டு நான் போகமாட்டனம்மா.
சுருதி!… அழாத. இனியும் ஏனம்மா அழுகிறாய்?…. என்ன? உன்ர சோகத்த கண்ணீரில கரைக்கிறியா?… சுருதி!… கதையம்மா. ஏன் மௌனமாய் இருந்து என்னைக் கொல்லுறாய்?…
“நீண்ட நேரமாய் அவன் சொல்வதை மட்டுமே அமைதியாய்க் கேட்டுக் கொண்டு அழுது கொண்டிருந்த சுருதி ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய்… கண்களைத் துடைத்துக் கொண்டு சுரேனை நிமிர்ந்து பார்த்தாள். வார்த்தைகள் வெளிவர மறுத்தன. வந்த வார்த்தைகளும் தடுக்கி விழுந்தன. ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டவளாய்…
“சுரேன் நாம் நினைக்கிறது எல்லாம் வாழ்க்கையில நடக்கிறதில்லை. நாம் பிறக்கும் போதே… இவனுக்கு இவள் என்று இறைவன் எழுதி வைச்சு விடுகிறான். அந்த தலை விதியை யாரால மாற்ற முடியும்?”…
“என்ன சொல்லுறாய் சுருதி? எனக்கு ஒண்டும் புரியவில்லையே. விளக்கமாய் சொல்லம்மா… சுரேன் படபடத்தான்.
“சுரேன் நான் சொல்லப் போறத அமைதியாய்க் கேளுங்கோ. எனர வீட்டில செல் விழுந்ததில என்ர அப்பா, அம்மா, அண்ணா, தங்கச்சி எல்லோருமே இறந்து போச்சினம். எனக்கு மட்டும்தான் சரியான காயம். ஏன் என்னை மட்டும் கடவுள் காப்பாற்றினானோ தெரியாது சுரேன்… என்றாள்.
“எனக்குத் தெரியும் சுருதி. நீ எனக்காகப் பிறந்தவள். என்னை விட்டு உன்னை அந்தக் கடவுள் கூட ஒரு போதும் பிரிக்க மாட்டான்.”
சுருதி குறுக்கிட்டாள்.
“நான் சொல்லுறதை முழுசாய்க் கேளுங்கோ சுரேன்.”… அவள் தொடர்ந்தாள்…
” சுரேன் நான் என் பெற்றோர், என்னோடு கூடப் பிறந்தவர்கள் எல்லோரையும் இழந்து தனிமரமாய் தவிச்ச போதுதான் பிரான்சில் இருந்து மாமா என்னை கூப்பிட்டார். இப்போது என் மாமாவின் மகனுக்கு நான் நிச்சயிக்கப்பட்டவள்.
என இல்லாத பொய்யை ஒன்றை எடுத்து பெரிதாய் போட்டாள் சுருதி.
சுரேன் ஒரு கணம் திடுக்கிட்டவனாய்…
“சுருதி!.. நீ இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையா? “
“சுரேன் நீங்கள் கூட இப்போது இன்னொருத்தியின் கணவன். இனி எப்படி?”
“சுருதி!… நான் மணமுடிக்கு முன்னரே எம் காதலை அவளுக்குக் கூறினேன். அவளுக்கு எல்லாம் தெரியும் சுருதி”
“ஓம்… நீங்கள் நம் காதல் பற்றிச் சொன்னீங்கள். ம்… அதை நான் ஏற்றுக் கொள்ளுறன். ஆனால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீங்கள்?…. நான் சுருதியைக் காதலிச்சன். இப்போது அவள் உயிரோடு இல்லை… எண்டுதானே சொல்லியிருப்பீங்கள்?… சுருதியை இனி உயிரோடு கண்டால் உன்னை விட்டு போயிருவன்… என்று சொல்லியிருக்க மாட்டீங்கள் தானே?”… என்றாள்.
“அப்படி நீங்கள் சொன்னால் கூட… அதை ஒரு பெண்… ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டாள். யாரை விட்டுக் கொடுத்தாலும் ஒரு போதும் ஒரு பெண் தன் கணவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டாள்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கவோ, அல்லது அவளின் கண்ணீரை
காணவோ நான் விரும்பேல்ல சுரேன். ப்ளீஸ்… நீங்கள் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ சுரேன்… என்று கூறி முடித்தாள் சுருதி.
நேரம் காற்றாய்க் கரைந்தது. சுரேன் லண்டனுக்கு போக வேண்டிய புகையிரதம் புறப்பட ஆயத்தமாகி… மெல்ல மெல்ல ஊரத் தொடங்கியது.
“சுருதி!… கடைசியாய் கேட்கிறன்… என்னை விடைபெறச் சொல்கிறாயா? உன்னை விட்டு எப்படியம்மா?…
வார்த்தைகள் தடுமாற சோகமாய் கேட்டான் சுரேன்.
என்னால் மட்டும் உங்கள மறந்து வாழ முடியுமா சுரேன்? ஆனாலும் வாழத்தானே வேண்டும். அவளின் இதயம் பலமாய்ச் சொன்னது… ஆனாலும் வார்த்தைகள் எதுவும் வெளிவராமல்… வாயை இறுக்க மூடியபடி கண்ணீர் மல்க தலையை மட்டும் அசைத்தாள் சுருதி.
புகையிரதம் வேகமாய் ஓடத் தொடங்கியது. தன் கையை அசைத்து விடை கொடுத்தாள். புகையிரதம் புள்ளியாய் ஓடி மறைந்தது. ஆனால் அங்கே சிலையாய் நின்றாள் சுருதி.
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=4&t=167&st=0#entry614
