நிழலாக நீ வந்தால்…
அன்று ஞாயிற்றுக் கிழமை. வழமையாக எட்டு மணிக்கு எழுந்து சிட்டாய்ப் பறக்கும் அவன்…
அன்று விடுமுறை நாள் என்பதால் இன்னமும் போர்வைக்குள் இருந்து வெளிவரவில்லை.
கண்ணைப் பூஞ்சியபடி கடிகாரத்தைப் பார்த்தான் சுதன்… காலை 09.00 மணி.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்… என நினைத்துக் கொண்டவனாய்…
கண்களை இறுக்க மூடியவன்தான்… சற்று நேரம் உறங்கியே விட்டான்.
கண் திறந்து பார்த்தபோது… காலை 10.00 மணி.
சடாரென்று எழுந்தவன்… இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி…
‘ஊ… ஊ… ஹி… என்கிற சத்தத்தோடு சோம்பலை முறித்துக் கொண்டு…
குளியலறைக்குச் சென்று குளித்துத் தயாராகி…
காலை டிபனை முடித்துக் கொண்டு…
சர்ச்சுக்குச் செல்ல ஆயத்தமானான்.
வாரத்தில் ஓர் நாள் சர்ச்சுக்குச் சென்று…
பணிவிடைகள் செய்வதில் அவனுக்கு ஓர் ஆத்ம திருப்தி.
வழமைபோல் அன்றும் சர்ச்சுக்குக்குள் நுழைந்தவனின் கண்கள்… வழமைக்கு மாறாக…
அவன் கட்டளையிடாமலேயே அந்தத் திசையை நோக்கி… அவளைத் தேடின.
அங்கே… அந்த மாதாசொரூபத்தின் முன்னே…
எப்போதும் போலவே உருகி வழியும் மெழுகுதிரி…
அதன் முன்னே மண்டியிட்டபடி… கண்களை இறுக்க மூடி…
மெழுகோடு போட்டி போட்டு உருகி வழியும் கண்ணீரோடு அவள்.
அவளது கன்னங்களில் கண்ணீர் வடிந்தது…
அவளின் தொண்டை விம்முகிறது.
கண்களில் அரும்பிய நீர்த் திவலைகள் எல்லாம்
முகாரி ராக மூர்ச்சனையோடு வழிந்து விழுகின்றன.
ம்… அவள் சந்தோசமாக வாழ வேண்டுமானால்…
பல நினைவுகளை மறக்க வேண்டும்.
அவற்றை எல்லாம் மறக்க வேண்டுமானால்…
அவள் இறக்க வேண்டும்.
எதையும் மறக்கவும் முடியாமல்… இறக்கவும் முடியாமல்…
நடைப்பிணமாக அவள் வாழத் தொடங்கி வருடங்கள் பல ஆகி விட்டன.
மனதில் வலி வரும் போதெல்லாம்…
விழிகள் நனைய நனைய…
இங்கு வந்து அழுது தீர்ப்பதை விட அவளுக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை.
படம் – அச்சாணி.
பாடல் – மாதா உன் கோவிலில்…
சில வாரங்களாய் சுதனின் கண்களில் இந்தக் காட்சி பட்டுத் தெறித்தது.
யாரவள்?… அவள் ஏன் அழுகிறாள்?…
அவள் பேர் என்ன?… எங்கு இருக்கிறாள்?…
என்கிற விவரங்கள் எதுவுமே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதுக்குள்ளும் இனம் புரியாத ஓர் சோகம் எழும்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் அவன் மனம் துடியாய்த் துடிக்கும்.
ஆனாலும் திடீரென அவளோடு எப்படிப் பேச முடியும் என நினைத்துக் கொண்டவனும்…
அவளறியாமல் அவன் பல தடவை அவள் பின்னால் சென்றும் இருக்கிறான்.
அவள் பெரிய பேரழகி அல்ல… ஆனாலும் அவள் அழகிதான்.
சுருண்ட தலைமுடி… வட்ட முகம்… மெலிந்த இடை…
அமைதியாக நடக்கும் சிற்றோடை போலிருந்தாள்.
யாருடனும் பேசாமல் தலையைக் குனிந்தபடி…
எவ்வளவு ஓரமாக நடக்க முடியுமோ அவ்வளவு ஓரமாக நடந்து போவாள்.
இப்படியே அவள் பின் சென்று நோட்டம் விட்டவனும்…
அன்று ஓர் முடிவுக்கு வந்தவனாய்…
அவள் புறப்படும் நேரம் பார்த்து அவள் முன்னால் சென்று…
” ஹாய்” … என்றான்.
திரும்பிப் பார்த்தவள்… பின் எதுவுமே பேசாமலேயே போய் விட்டாள்.
மறுமுறை அவளைக் கண்ட போதும்…
” ஹாய்.. வணக்கம் ”… என்றான்.
யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்ற எண்ணத்தில்…
அழைப்பு காதில் விழுந்தும், விழாத மாதிரிச் சென்றாள்.
மீண்டும் அதே குரல்…
”ஹலோ உங்களைத்தான்”… என்றதும் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே அவன்… பதிலுக்கு அவளும் ” வணக்கம்” என்றபடி
ஒரு வரட்டுப் புன்னகையை வீசி விட்டு அன்றும் சென்று விட்டாள்.
இருப்பினும் சுதனும் விடுவதாயில்லை.
தன் கடமையில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்
வேதாளத்தைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கிய கதையாய்…
மீண்டும் மீண்டும் அவளோடு பேச முயற்சி செய்தான்…
அன்று நல்ல மழை…
சர்ச்சின் வாசலில் ஓரமாய் ஒதுங்கி நின்றவளின் அருகே சென்று…
தலை அசைத்து மௌனமாய் வரவேற்றவனாய்…
மிகுந்த தைரியத்தோடு… ” குட்மார்னிங்” என்று விஷ் செய்தபடி…
” நல்ல மழையாய் இருக்கு இல்ல?”… என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவளும்… அரை நிமிஷம் தயங்கினாள்.
எங்கிருந்து இவன் திடுமெனெ முளைத்திருக்கிறான்!
இத்தனை காலமாய் கண்களில் பட்டதில்லை.
இப்போது அடுத்தடுத்து பார்வையில் விழுவதோடு…
மனசையும் அவ்வப்போது வருடிக் கொடுப்பதும் ஏன்…?
அவனின் கனிவான பேச்சும்… கருணை நிறைந்த பார்வையும்…
அவள் மனதில் ஏதோ ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியது.
மன அமைதியைக் கொடுக்கும் அதி மகத்தான சக்தி ஒன்று
அவனிடம் உள்ளதை அவள் உணர்ந்து கொண்டாள்.
வாரங்கள் சில கடந்தன. மீராவும், சுதனும் நண்பர்கள் போல் பழக ஆரம்பித்தனர்.
அந்த ஞாயிறு மாலை…
அந்தி சூரியன் மலை வாசலில் விழுந்து கொண்டிருந்த ரம்யமான அந்தப் பொழுதில்…
பொன் மாலை நேரத்திற்கே உரிய மஞ்சளும், சிவப்பும் கலந்து
அந்தி வானம் செக்கச்செவேல் என்று காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அந்த அந்தி வானத்தின் அழகும்…
மெல்லெனத் தவழ்ந்து வந்த இலேசான இளம் தென்றலும்…
தலைமுடியை மெல்ல அசைத்து… உடலை மெல்ல வருடி…
குளிரைக் காதோரம் உரசிச் செல்லும் காற்றுமாய் பரவசத்தைக் கொடுத்திருக்க…
அவன் அருவியாய் அன்பை, பாசத்தை, குழைத்துக் கொட்டுகிறான்…
அவளும் அதில் ஆனந்தமாய் நனைகிறாள்.
வறண்ட பாலையில் நீர் ஊற்றியது போல… அவன் பேசப் பேச…
அவள் மனம் அத்தனையையும் உள்வாங்கிக் கொள்கிறது.
அப்போதுதான் அவள் பேர் மீரா எனவும்…
தாய், தகப்பன், உறவுகள் என்று யாருமே இல்லாத அனாதை என்பதை அவனும்…
அவன் பேர் சுதன்…
பாங்கில் வேலை பார்க்கிறான் போன்ற விபரங்களை அவளும்… தெரிந்து கொண்டார்கள்.
” மீரா… உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்…
ஒரு நாளைக்கு என் வீட்டுக்கு வாருங்களேன்.
கட்டாயம் என்றில்லை… விரும்பினால் மட்டும்”… என்றான்.
அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மீரா ஆச்சரியத்தோடு புருவங்களை உயர்த்திப் பார்த்தாள்.
”உங்கள் வீட்டில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள்?… அதுபற்றி நீங்க சொல்லியே?”
” என் வீட்டில் சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு… என்று எல்லோருமே இருக்கினமே”
” ஓ… அதில நீங்க யாராம்? ”
” நான் தான் யானை… பருத்த உருவம்… கருத்த நிறம்… பார்க்கத் தெரியல்லையா உங்களுக்கு? ”
”ம்ம்… தெரியுது தெரியுது”… என்றபடி சிரித்தாள் அவள்.
தனிமையும், வெறுமையும், துரத்தும் வாழ்க்கையும்…
மறுபுறம் தன்னுடைய உணர்ச்சிகளையும், வேதனைகளையும்
கொட்டித் தீர்க்க… சிநேகமாய் பார்க்க… மனம் விட்டுப் பேச…
ஆளில்லாமல் இதுவரை தவித்த தவிப்பு அவளுக்குக் கொடுமையாக இருந்தது.
இப்போது அந்தத் தவிப்பு சிறிது விலகிக் கொள்ள…
நேரம் போனதே தெரியாமல் சிறிது நேரம் சிரித்து, சந்தோசமாய் கூடி இருந்து பிரிந்தார்கள்.
பிறிதொரு நாள் மீராவும் அவனின் வீட்டிற்குச் சென்றாள்.
வாசல் கதவு திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றவன்…
அங்கெல்லோரையும் அறிமுகம் செய்தான்.
இது என் மனைவி சுபா…
” வாங்க மீரா… எப்படி இருக்கிறீங்க”…
என அன்போடு வரவேற்றாள் சுதனின் மனைவி சுபா.
தங்க விக்கிரகம் போல் அழகாகக் காட்சியளித்த சுபாவை
உடனேயே இவளுக்கும் பிடித்துக் கொண்டது.
அப்புறம்… அழகு நிலவாய்…குட்டித் தேவதையாய்…
சுட்டிப் பெண்ணாய் காட்சியளித்த அவனின் மகள்.
பாசமே உருவமாக வரவேற்ற அவனின் தாய்…
அப்புறம் தந்தை எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான்.
ஏதோ பல நாள் பழக்கப்பட்டவர்கள் போல்…
அவர்கள் எல்லோரும் வரவேற்றதையும்…
மீரா மீரா என பாசம் காட்டியதையும் கண்டு…
ஒரு கணம் திக்குமுக்காடி நின்றாள் மீரா.
அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியைப் போல் இவளையும் அன்போடு அரவணைத்து…
எல்லோரும் ஒன்றாய்க் கூடியிருந்து… மதிய உணவையும் உண்டு கூடி மகிழ்ந்திருந்த வேளை…
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படங்கள் அவள் கண்களில் விழுந்தன.
அவை, அவன் ஒரு பட்டதாரி என்பதையும்…
விளையாட்டு வீரன் என்பதையும் உறுதிப்படுத்தி நின்றன.
சாப்பாட்டை முடித்து ஆறுதலாய் அமர்ந்திருந்த வேளை…
சுபா கொண்டுவந்து கொடுத்த ஆல்பங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.
அப்போதுதான் சுதனும், மனைவியும் ஒரு மேடைப் பாடகர் என்பதையும் கூடத் தெரிந்து கொண்டாள்.
” சுதன் உங்களிடம் ஒன்று கேட்கலாமா…?”
” ஒன்றா…? ஏன் அதுக்கு மேல கேட்க மாட்டீங்களோ?… ஒன்றல்ல எத்தனையும் நீங்க கேட்கலாமே”
” நீங்களும், சுபாவும் சேர்ந்து ஒரு பாட்டொன்று பாடுங்களேன்… ப்ளீஸ்”
” இது ஒரு சின்னப் பிரச்சனை. இதுக்கெல்லாம் போய் எதுக்கு ப்ளீஸ் என்ற பெரிய வார்த்தையெல்லாம் மீரா?”
எனச் சொல்லியவாறு அவளையும் அழைத்துக் கொண்டு எல்லோரும் ஓர் அறைக்குள் சென்றார்கள்.
அங்கே இசைக் கருவிகள், மைக் எல்லாம் இருந்தன. அவற்றை எல்லாம் சரிபார்த்தவனும்…
” சுபா ரெடியா… ஓகே… வண், ரூ, த்திறீ, வ்வோர்” …
படம் – வாழ்த்துக்கள்.
பாடல் – எந்தன் வானமும் நீதான்… [Mahathi, Haricharan]
பாடல் முடிந்ததும் தன் மனைவியைப் பாராட்டியவாறு…
இறுக்க அணைத்து… அவள் இதழ்களில் ‘இச்’ என்று ஓர் முத்தம் பதித்து அவன் அன்பைத் தெரிவித்தான்.
இவற்றை எல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த மீராவுக்குள் ஒரே பிரமிப்பு.
எத்தனை திறமைகள் இவனுள் கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும்
ஒவ்வொரு கலைஞன் இருக்கிறான் என்பது தெரியும்.
ஆனால் ஒருவனுக்குள் மட்டும் இத்தனை திறமைகள். இத்தனை திறமைகள் இருந்தும்
எந்த ஓர் பந்தாவும் இல்லாமல் எல்லோருடனும் அன்பாக, பணிவாக இருக்கிறானே…
அவன் நல்ல உள்ளத்திற்கு இவன் இன்னும் பல நூறு ஆண்டு காலம் நல்லா வாழணும்…
என மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டவளும்…
இவனைத் தனக்குக் காட்டித் தந்த அந்த மாதாவுக்கும் மனதார நன்றியினைக் கூறிக் கொண்டாள்.
நீ உன்
அன்னை மேல் காட்டிய அன்பையும்
தந்தை மேல் காட்டிய நேசத்தையும்
மனைவி மேல் காட்டிய காதலையும்
பிள்ளை மேல் காட்டிய பாசத்தையும் கண்டு…
என்னுள்ளம்
உள்ளே மெதுவாய் அழுதது.
உன் பிள்ளையாய் ஆவது
நான் பிறந்திருக்கக் கூடாதா என்று!
அந்தி சாய்ந்து இரவை அரவணைத்துக் கொண்டிருந்தது.
அவள் தன் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானாள்.
அப்போது சுதனின் தாயார் ஓர் பார்சலைக் கொண்டு வந்து…
” இந்தாம்மா மீரா… இதைக் கொண்டுபோய் இரவைக்குச் சாப்பிடம்மா”…
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி இங்கே வந்து போம்மா…
இனி இது உன் வீடு என்று நினைத்துக் கொள்”…
என்றவாறே இரவுக்கான உணவைக் கொடுத்தபோது…
அந்தத் தாயின் அன்பில் ஒரு நிமிடம் மூழ்கி…
அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் மீரா.
எல்லோரிடமிருந்து விடைபெற்றவளை அவள் வீடுவரை அழைத்துச் சென்றான் சுதன்.
”என்ன மீரா பேச்சு மூச்சே இல்லாமல் அமைதியாகி விட்டீங்களே”
” என்ன பேச?… ஆச்சரியமா இருக்கு சுதன்.
நானும் இதுவரை எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்திருக்கிறேன்.
கோட்டும், சூட்டுமாய் வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கும் அவர்களிடம்…
சொல் ஒன்றாய் செயல் ஒன்றாய் கண்டேன்.
சுற்றி இருக்கும் சொந்தம் கூட சுயநலமாய்த்தான் இருக்கக் கண்டேன்.
யாரிடமும் உண்மை, நேர்மையைக் காணவில்லை.
முதன் முதலாய் நான் தேடிய உண்மையான மனிதனை இங்கே காண்கிறேன்.
ஓ… எத்தனை திறமைகள் இருந்தும்… அன்பாய், அமைதியாய், பண்பாய்…”
” என்ன ரொம்ப புகழுகிறீங்களே?… அப்படியில்லை மீரா.
வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போன்றது.
அது எந்த நேரம் உடையும் என்பது யாருக்குமே தெரியாது.
இருக்கும்வரை சந்தோசமாக வாழ வேண்டும்.
எம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும்.
இதுதான் என் கொள்கை. இன்றைய பொழுதை எடுத்துப் பார்த்தீங்க என்றால்…
நாம எல்லோருமே சந்தோசமா இருந்தோம் இல்லையா?
இந்த நிமிடம் இறந்தால் கூட நான் நின்மதியாய் இறப்பேன் மீரா.”…
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது…
கார் வீட்டு வாசலை அடைந்தது.
அவன் முதலில் இறங்கி கதவைத் திறந்து விட்டான்.
காரில் இருந்து இறங்கியவளும்…
கண்களை மலர்த்தி மனப்பூர்வமாக … ”ரொம்ப தாங்க்ஸ்”…
என்று மங்கிய பார்வையுடன் நன்றியைச் சொல்ல… சுதன் நெகிழ்ந்தான்.
அவன் விழிகளை உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
தலைக்கு மீறின சுமைகள் சுமந்து… அவள் தனித்துப் போராடிய பொழுதுகள்…
பருவத்தின் ஆசைகள் துறந்து… வருந்தித் தவித்த காலங்கள் பற்றி அவள் சொன்னதெல்லாம்
அவன் கண்முன்னே வந்து போயின… அவனுக்கு அவள் முகத்தைப் பார்த்த போது…
இனம் புரியாத ஓர் வேதனை இதயத்தைக் கௌவிப் பிடித்தது. அவன் மீராவைப் பரிவுடன் ஏறிட்டான்.
” ஏய்… இனி எதற்கு அழுகை…?”…
என்றவாறு அவளை அன்போடு அணைத்துக் கொண்டான்.
நேசனைகளில் உயரிய நேசனை ஒரு நல்ல நண்பனின் நேசனை…
அந்த நேசனையோடு அவன் தன் இரு கரங்களாலும்
அவள் முகத்தைத் தூக்கி நிமிர்த்திப் பார்த்தான்.
பூரண சந்திரனில் கூட கறைகள் இருக்கலாம்.
ஆனால் அவளது அழகிய அந்த வதனத்தில் எந்தக் களங்கமும் இருக்கவில்லை.
அன்பு அவன் உள்ளத்தில் ஊற்றெடுத்தது…
அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அவன் தன் கரங்களால் துடைத்து…
” நானிருக்கிறேன்… இனி நீ அழக் கூடாது”… என்றான்.
அவளும் நட்போடு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
படம் – உன் கண்ணில் நீர் வடிந்தால்…
பாடல் – கண்ணில் என்ன கார் காலம்…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10368&pid=143284&st=0&#entry143284
