நிஜங்களின் தரிசனம் - 2

அந்தத் தொழிற் கல்விக் கூடத்தில் சில வாரங்களுக்கு முன் ஆரம்ப மொழிபயிலும் பிரிவில், கிட்டத்தட்ட 40-45 வயது மதிக்கத்தக்க அந்த நபருடன் ஓர் நாள் வந்து சேர்ந்தாள் சுருதி. அவளை தேநீர் இடைவேளையின் போது நான் அடிக்கடி சந்திப்பதுண்டு.

மொட்டைத் தலையும், அளவுக்கு மீறிய உடல் பரும னும், பென்னம் பெரிய வயிறும் இத்தனையும் ஒருங்கே அமைந்த அந்த நபரைப் பார்த்ததும் சுருதியின் தந்தை யாக இருக்கும் என்று நானும் நினைத்துக் கொண்டேன்.

தினசரி காலையும், மதியமும், மாலையும் காரில் கூட்டி வந்து விடுவதும், ஏற்றிச் செல்வதையும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். சுருதியைக் காணும் வேளைகளில் நானும் சிரித்து விட்டு செல்வதுண்டு.

சில சந்தர்ப்பங்களில் நானும்….

“உங்களுக்கு என்ன சுருதி ? அப்பா பிள்ளேல நல்ல பாசம் போல. பிள்ளையை நடக்க விடாமல் காரில் தினமும் ஏற்றி இறக்கிறார்”… என்பேன்.

பதிலுக்கு அவளும் வில்லங்கத்துக்கு வரவழைக்கப்பட்ட ஓர் புன்னகையை உதிர்த்து விட்டுச் செல்வாள். அது வும் அந்த நபர் அருகிலிருக்கும் சமயத்தில் நான் சிரித்தால் கூட பதிலுக்கு அவள் புன்னகை செய்வதே கிடையாது. ஏதோ ஓர் வித பயத்தில் நடுக்கம் கொண்ட வளாய் எதையுமே காணாதது போல் போய் விடுவாள்.

“ஓ!… அப்பா மிகவும் கண்டிப்பானவர் போல. அதுதான் சுருதி சிரிக்கவும் பயப்படுகிறாள்… என்று நானும் நினைத்தவளாய் அப்படியான வேளைகளில் நானும் புன்னகை செய்வதைத் தவிர்த்துக் கொண்டேன்.

இப்படியான அப்பாமார்கள் இன்னமும் அதுவும் வெளி நாட்டிலும் உலாவுகிறார்களா?… என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதும் உண்டு.

அன்று ஓர் நாள். சுருதியின் வகுப்பில் ஆசிரியர் வகுப்பு க்கு வரவில்லை. ஆதலால் அவர்கள் எல்லோரும் திரு ம்பி வீட்டுக்கு போக வேண்டிய நிலை. அந்த வகுப்பி
லிருந்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். சுருதி என் வகுப்பு வாசலில் வந்து நின்று கொண்டு என்னை வரும்படி கையால்,
சைகை காட்டினாள்.

நானும் எனது ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவளருகில் சென்று என்னவென வினாவி னேன். அவளும் தன் நிலமையைக் கூறி…

“ மதியம் வரை உங்கள் வகுப்பில் இருக்க முடியுமா?”… எனக் கேட்டாள். நானும் எனது ஆசிரியரிடம் அனுமதி வாங்கிக் கொள்ள… சுருதியும் என்னருகில் வந்து அமர்ந்து கொண்டாள். காலை 10 மணிக்கு தேநீர் இடை வேளையின் போது……..

“என்ன சுருதி அப்பாவுக்காக காத்திருக்கிறீர்களா?”…. என்றேன் நான்.

அவளின் முகம் சட்டென மாறியது. அவள் கண்கள் கலங்கின.

“எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் சத்தியா. அது எனது அப்பா அல்ல. அது என் கணவர் என்றாள்.”

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மிகவும் மெல்லிய
உடலமைப்பும், வெள்ளை நிறமும் கொண்ட இவளைப் பார்த்தால் அவரின்மகள் போலல்லவா இருக்கிறாள்? இவளின் வயதுக்கும், உருவத்துக்கும் ஏணி வைத்தா லும் எட்டாத, பொருத்தமற்ற ஓருவர் எப்படி இவள் கணவராய் வந்தார்?…. இப்படி என்னுள் ஆயிரம் கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்தன. இருந்தாலும் என்னைச் சுதாகரித்துக் கொண்டு…

”மன்னித்துக் கொள்ளுங்கள் சுருதி”… என்றேன்.

“இல்லைச் சத்தியா இதில் உங்களில் என்ன பிழை இருக்கிறது? நீங்கள் மட்டு மல்ல பார்ப்பவர்கள் எல்லோ ரும் அப்படித்தான் நினைக்கிறார்கள், அப்படித்தான்
சொல்கிறார்கள்.”… என்றாள். பின் அவளாகவே தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

ஆம். அவள் குடும்பம் ஓர் ஏழ்மைக் குடும்பம். ஐந்து பெண் பிள்ளைகள். ஐந்து பெண்களைப் பெற்றால் “அரசனும் ஆண்டியாவான்” என்பது போல், அவளின்
குடும்பமும் கஸ்ரத்தை சுமந்தது.

சுருதி தன் படிப்பை முடித்து விட்டு தன் தாயாருக்கு உதவியாய் வீட்டில் இருந்தாள். சுருதியின் தாயாருக்கும் தந்தைக்கும் ஐந்து பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஒரே வேதனை. இந்த வேளையில்தான் சுருதியின் மாமனார் மூலம் சுருதிக்கு ஓர் வரன் பேசப்
பட்டு வந்தது.

“வெளிநாட்டு மாப்பிள்ளையாம். அதிலும் சீதனம் எதுவும் வேண்டாமாம். ஓர் அழகான பெண்ணை மாத்திரம்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்களாம்.”…

இப்படி அவளின் மாமனார் சொன்னதும், தம் குடும்பக் கஸ்ரத்தின் நிமித்தம் தம் பெண் பிள்ளைகளை எப்படிக் கரை சேர்ப்பது? அதிலும் இந்தக் காலத்தில் பெண்ணை சீதனம் எதுவும் இல்லாமல் எப்படிக் கரை சேர்ப்பது? என்ற சோகத்துக்குள் துடித்துக் கொண்டிருந்த அவளின் பெற்றோருக்கு ஏதோ விடிவு பிறந்தது போல் உணர்வு.

பெற்றோர்கள் இருவரும் யோசித்து ஓர் முடிவுக்கு வந்தவர்களாய்… இந்த விடயத்தை சுருதிக்குச் சொன் னார்கள். சொன்னதும் சுருதி உடனே மறுத்து விட்டாள்.

அம்மா அப்பாவைப் பிரிந்து தான் தூரதேசம் போக மாட்டேன் என்றாள் சுருதி. அது மட்டுமல்ல அவளின் வயதோ 19. ஆனால் அந்த மணமகனின் வயது 41. இதுவும் ஓர் காரணமாக இருந்தது. அப்போது அவளின் தாயும், தந்தையும் தமது கஸ்ரத்தை எடுத்துக் கூறி, அவளை ஒருவாறு சம்மதிக்க வைத்து விட்டார்கள். மாதங்கள் சில கடந்தன. சிங்கப்பூரில் மாப்பிள்ளை வந்து திருமணம் செய்வதாய் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுருதியும் ஆயிரம் எண்ணங்களைச் சுமந்து கொண்டு சிங்கப்பூர் வந்து இறங்கினாள். அவள் சிங்கப்பூர் வந்து ஓரிரு நாட்களில் பிரான்சிலிருந்து மாப்பிள்ளையும் சிங்கப்பூர் வருகிறார். மாப்பிள்ளையை வரவேற்க மாமா வுடன் எயாப்போட் சென்றாள் சுருதி. மொட்டைத் தலை மாப்பிள்ளையைக் கண்டதும் திகைத்து விட்டாள் சுருதி. மனம் உடைந்தவளாய் தனக்கு இந்த மாப்பிள் ளையைப் பிடிக்கவில்லை என்று மாமனாரிடம் கூறி அழுதாள்.

“ஓம் என்று நீயும் ஒத்துக் கொண்டு தானே வந்தாய்?” என்கிறார் மாமனார்.

“மாமா போட்டோவில் அவர் அழகாகத்தானே இருந்தார்… அத்தோடு தலையில் நிறைய முடியும் இருந்ததே?”….

இது அவளின் கண்ணீரோடு சிந்திய வார்த்தைகள். ஆனால் திருமணத்துக்கான திட்டங்களும், ஏற்பாடுக ளும் எல்லாமே முடிவுற்ற நிலையில் இப்போது எப்படி வேண்டாம் என்று சொல்வது? இது மாமனாரின் வாதம்.

அவளின் வாதங்கள் எதுவுமே அங்கு செல்லுபடியா காத நிலையில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பலிக் கடாவைப் போல் கழுத்தை நீட்ட… தாலி சுருதியின் கழுத்தில் ஏறி விடுகிறது.

பிறகு என்ன? பிரான்ஸ் வந்து சேர்ந்தாள். உருவத் திலோ, வயதிலோ ஒத்து வராத கணவனின் மனதுக் குள் ஓர் தாழ்வு மனப்பான்மையும், சந்தேகமும் நிறை ந்து வழிய… சுருதி யாருடனும் பழகுவதையோ, கதைப் பதையோ விரும்பாது கட்டுப்பாடுகளை கொட்டிக் குவிக் கிறார் மாப்பிள்ளை.

”இதோ இங்கு வெளி வரும் அத்தனை தமிழ் ரீ வீ இன் வருட சாந்தா அட்டை. அதைப் பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் பேசாமல் இரு”… என்கிறாராம். செய்வதறி யாது துடிக்கின்றாள் சுருதி.

“இவை எல்லாம் உங்கள் அம்மா, அப்பாவுக்குத் தெரியுமா?”… என்று கேட்டேன்.

“இல்லை. நான் இதுவரை எதுவுமே சொல்லவில்லை. சொல்லித்தான் இனி என்ன நடக்கப் போகிறது? நான் மறுத்த போது என் பேச்சைக் கேட்காது, என் உணர்ச்சி களை மதிக்காது என்னை கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள். மகள் சந்தோசமாக இருக்கிறாள் என்ற சந்தோசத்தோடு அவர்களாவது நிம்மதியாய் இருக்கட் டும்”… என்று கூறியவள், இறுதியாக….

“எங்காவது ஓடிப் போகலாம் என்று நான் நினைக்கின் றேன். ஆனால் எனக்கு என யாரும் இங்கே இல்லை”… என்றாள் பரிதாபக் குரலில்.

1) குடும்ப கஸ்ரத்துக்காக பெற்றோர்கள் ஓர் பெண்ணின் உணர்ச்சிகளை மதிக்காது, வயது வித்தியாசத்தைப் பாராது திருமணம் செய்து வைப்பது சரியா?

2)இந்த சுருதி எங்காவது ஓடி விடலாம் என்று சொல்கிறாளே! அப்படி ஓர்
தவறை நாளை அவள் செய்தாளானால் அவளைத்தானே கூடாதவள் என்று எல்லோரும் அவளை ஒதுக்கி வைக்கவும் போகிறார்கள்?


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=1474

*** இவள் - சத்தியா ***

2 மறுமொழிகள்

  1. K. MATHURAVALLI சொன்னது,

    ஜூன் 13, 2008 இல் 7:26 நான்

    Dear Sandhiya,

    Pengalin Avalathai chitharikkum azhagana kadai.

    Thanking you,

    K.Madhu

  2. சத்தியா சொன்னது,

    ஜூன் 13, 2008 இல் 9:02 பிற்பகல்

    ம்ம்… நன்றி மது. :)

மறுமொழியொன்றை வழங்குக