71- நெஞ்சோடு ஒரு நினைவு!



நெஞ்சோடு ஒரு நினைவு!

பலமாய் அடித்து ஓய்ந்த
மழைக்குப் பிறகு
துளித் துளியாய்
தூறல் போட்டுக்
கொண்டிருந்தது வானம்!

அடுத்த மழை
அடிக்கத் தொடங்குமுன்பே
விரைந்துவிடத் துடித்து
விறுவிறுவென நடக்கிறேன் நான்.

அந்தச் சாலையோரத்து
மரத்தின் கிளையினை
யாரோ உலுப்பிய உலுப்பில்
சிதறி விழுந்த தூறல்கள்
என்னை நனைக்க…

நானும்
அண்ணாந்து பார்க்கின்றேன்.

அங்கே
பலத்த மழையில்
நனைந்து தோய்ந்து
பறந்துவந்த புறாவொன்று
சட்டென அந்த மரத்தில் அமர்கிறது!

ஓ!…
புறாவாரே!

இப்படித்தான்
முன்பெல்லாம்
என் அண்ணன் கூட…

மழை ஓய்ந்த பின்
மரக்கிளையினை உலுப்பி
எனைத் தெப்பமாய் நனைத்து…

நான் மயிர்க் கூச்செறிந்து
சிணுங்கி நிற்கும்
அழகை ரசிப்பதில்
அலாதிப் பிரியம் அவனுக்கு!

ம்…
அன்று அவன்!
இன்று நீ!
என…

அங்கே வந்தமர்ந்த
அந்தப் புறாவோடு…

உறவிழந்த வலியோடு
என் நினைவுக்குள்
கண்ணாமூச்சி காட்டிச் சென்ற
சுயமிழந்த சேதியினை
நேசத்தோடு பேசிச் செல்கிறேன்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8915

*** இவள் - சத்தியா ***

51 - முத்தம் !!!

user posted image

ஓ!…
முத்தம்!
முதல் முத்தம்!

உண்மையில்
இத்தனை சுகமானதும்
இனிப்பானதும் தானா…?

user posted image

என்
மேலுதடும் கீழுதடும் சேர்ந்து
உன் பெயரை உச்சரித்த போது…

இழுத்து
இச்சென்று
இதழ் பதித்தாய்
தித்திப்பாய் ஒரு முத்தம்!

ம்ம்!…
அதுதான் முதல் முத்தம்!!

user posted image

நீ முத்தமிடும்போதுதான்
நினைத்துக் கொண்டேன்!

அடடா!…
முத்தத்தில் கூட
இத்தனை தித்திப்பா…?

user posted image

செவ்விதழ்
என் இதழ் மீது உரச
இமைகள் செருக
கரங்கள் இறுக்கி
சுரங்கள் மீட்டி…

நொடிக்குள் பல யுகங்கள்
தொலைந்து
நாடி நரம்புகள் புடைக்க
நளின நெளிதலுக்குள்
இன்பத் தேன் பருகி…

ம்!…
தந்தாயே
தித்திப்பாய் ஒரு முத்தம்!

user posted image

அட…
போடா!

உன்னோடு
எத்தனை முறை
நனைந்தாலும் கூட
எனக்கு அலுப்பதே இல்லை
இந்த முத்தக் குளியல் மட்டும்!!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8369

*** இவள் - சத்தியா ***

32 - அந்தக் கணப் பொழுதுக்காய்!

user posted image

அந்தக் கணப் பொழுதுக்காய்…!

வீட்டின் கூரையில்
ஏறி நின்று
சேவல் கூவி
பொழுது விடிந்தது எனச் சொல்லி
எழும்பிய காலம் தொலைத்து…

குருவிகளின்
சுப்ரபாதங்கள் கேட்டு
பொழுது விடிந்தது எனச் சொல்லி
எழும்பிய காலம் தொலைத்து…

கிழக்கு வெளுக்கு முன்னே
கடிகாரத்தின் அலாரம்
இதய ஓசையை அதிரவைக்க
துடித்து எழுந்து
இயந்திரத்தோடு இயந்திரமாகி
இயந்திர மனிதானாய்
இன்று நீ.

நீர்க் குமிழி போன்று
நிலைக்க முடியாத
இந்த வாழ்க்கையில்
அடுத்த நிமிடம் என்பது கூட
உத்தரவாதம் இல்லாத நிலையில்…

மின்னலாய் மறையும்
நாட்களுடன் சேர்ந்து
வருடங்களும் தொலைந்து விட
இளமையும் கூட
தொலைந்து போவதை
நீயும் உணர மறுக்கின்றாய்.

எளிமையான உள்ளத்தோடும்
கள்ளம் கபடமற்ற
பாசப் பிணைப்போடும்
ஆனந்திக்கத் துடிக்கும்
இந்த வாழ்வுக்கு
ஆயுள் குறைகிறது.

கண்ணோடு இமை
சங்கமித்த காலம் முதல்
தினமும் கனவோடு
உன் உருவம் சங்கமித்து
தடம் புரள்கிறது.

எப்போது நீயும்
விழிக்கப் போகின்றாய்…?

வானவில்லின்
வர்ணங்கள் பூசிய
உன் வண்ண முகம்
வாடிவிடாமல்
பாதுகாத்துக் கொண்டு…

அன்னை, தந்தை
உடன் பிறப்புக்களின்
அத்தனை அன்பையும்
மொத்தமாய்
உன்னிடம் எதிர்பார்த்த படி
இப்போதும் நான்!

என்னோடு சேர்ந்து சிரிப்பதற்கும்
என்னோடு சேர்ந்து அழுவதற்கும்
உன்னை விட்டால்
எனக்கென யாருள்ளார்
இந்த உலகில்…?

என் இதயத்தோடு
இதயம் வைத்து
நீ பேசும் போது
உன் நெஞ்சுக்குள்
முகம் புதைக்கும்
அந்தக் கணப் பொழுதுக்காய்…

நீ அன்பாய் எனை அணைத்து
என் தலைகோதிவிடும் போது
என் வேதனைகளை எல்லாம்
தூக்கி எறிந்து விட்டு
உனக்குள் நான் தொலையும்
அந்தக் கணப் பொழுதுக்காய்…

என் ஆயுளையே
உனக்காய் அர்ப்பணித்து
இன்றும்
உனக்காய் என் காத்திருப்பு!

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=1964&st=0#entry20774

*** இவள் - சத்தியா ***

33 - காலம் கனியுமா…?



காலம் கனியுமா…?

எங்கேயோ
கூடிக் குலாவி மகிழ்ந்தாடி
கீச்சுக் கீச்செனெ குரலெழுப்பி
சிறகடித்துப் பறக்கும்
சிட்டுக் குருவிகளின்
சிறகசைப்புக்களின் சத்தம்
என் காதுக்குள்
நிஜமாய் நுழையும் போதெல்லாம்…

சத்தங்கள் எதுவுமின்றித் திறக்கும்
கதவின் இடுக்கு வழியே
அனுமதியின்றி நுழையும்
வெளிச்சம் போல்…

ஆழப் புதைந்த
உன் நினைவுகள் எல்லாம்
தொலைந்த புள்ளியில்
மீண்டும் பிறப்பெடுத்து
உயிர் கொண்டெழுந்து
உனைத் தேடுகிறது!

ம்…
அன்பெனும் விதை விதைத்து
நெஞ்சமெல்லாம் நேசம் வளர்த்து
நேசக் கரம் நீட்டி
வாவென்று அழைத்து…

இன்றும்
ஏதோ ஓர் நம்பிக்கையில்
உன் நினைவில் நானும்
அலைமோதும் எண்ணங்கள் சுமந்து…

சில்லென வீசும்
தென்றலின் சுகத்தோடு
பார்வையை அகல விரித்து
பாரெங்கும் பறந்து திரிந்து
உயிர் உரசும் நிமிடங்களில்
மனசின் பாரங்கள் இறக்கத் துடித்து…

ம்ம்…
அந்தக் காலக் கனிவுக்காய்
இன்னமும் இன்னமும்
உனைத் தேடித் தேடி
பறந்து கொண்டிருக்கிறது
என் நினைவுகளும் பொழுதுகளும்!

*** இவள் - சத்தியா ***

 

 

 

43 - உன் நினைவாய்!

user posted image

உன் நினைவாய்…

ஓ!…
சித்திரை வருடப் பிறப்பு!

என் வாழ்வின்
நித்திரை தொலைத்து
முத்திரை பதித்து விட்டுச் சென்ற
சித்திரை வருடப் பிறப்பு இது!

கனவுகளைக் கருக்கி
என் உள்ளமெல்லாம்
விரக்தியையும்
வேதனையையும்
விதைத்து விட்டுச் சென்ற
அந்த நாளை
இன்றும் மீட்டிப் பார்க்கிறேன்!

ஓ…
இதயம் வலிக்க
விழி நீர் வடித்து
கதறிக் கதறி
எல்லோரும் கண்ணீரில் மூழ்க…

சிரித்த முகத்துடன்
விழிகள் மூடியபடி
விறைத்துப் போய்க்
கிடக்கிறாய் நீ!

பின்…
பட்டுச் சேலை கட்டி
பொட்டு வைத்துப்
பூச் சூடி
சுமங்கலியாய் நீயும்…

தலையாட்டும்
விதியின் கையில்
எம்மை விளையாட்டுப்
பொம்மையாக்கி விட்டு…

இதே போல் ஒரு
சித்திரை வருடப் பிறப்பில்தான்
விடைபெற்றுச் சென்றாய்!

ம்…
என் அன்னையே!

இன்றும் கூட
உன் நினைவாய்
என்னிடம் எதுவுமே இல்லை!

பிஞ்சு வயதில்
என் நெஞ்சில்
நீ தந்து விட்டுச் சென்ற
இந்த நிகழ்வின்
நினைவுகளைத் தவிர…!

*** இவள் - சத்தியா ***

44 - என் சுவாசமே!

img338/36/144960hi9.png 

 !…
எனது நிழலில்
ஒளிந்து கொண்டே
எனக்கு
மருத்துவம் பார்க்க மறுக்கும்
என் இதயத்துத் தேவதையே!

 இப்போதும்
உனை நான் நெருங்க நெருங்க

நீ எனை விட்டு
விலகி விலகியே செல்கிறாய்!

 உனது நிழலைத் தேடியலைந்து
நாளெல்லாம்
காதலால் கவிமாலை புனைந்து
உனக்காய் காத்திருக்கிறேன்!

 நான் நடந்து செல்லும்
பாதைகள் எங்கிலும்
உன் நினைவுகளின் தடங்கள்தான்!

 கடலின் கரையில்
நடக்கும் பொழுதிலும்
அலையாய் வந்து
என் கால் பிடித்திழுப்பதும்
உன் நினைவுகள்தான்!

 இப்படியே
உன் நினைவுகளின் கிளைகளைப்
பிடித்துத் தொங்கித் தொங்கி
உனக்காய்த் தேய்ந்து தேய்ந்து
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
இந்த மனசு!

 !…
என் சுவாசமே!

 இன்னும் எத்தனை காலங்களிற்கு
மௌன யுத்தம் செய்து
எனைக் கொல்லப் போகின்றாய்…?

 http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8634&st=0&#entry124498

 
*** இவள் - சத்தியா ***
user posted image

45 - என் வானத்துத் தேவதையே!

img267/8690/07071306302810166851784wr9.png 

என் வானத்துத் தேவதையே!

அடி
என் வானத்துத்
தேவதையே!

வந்த ஒரு நாளிலேயே
ஒரு விநாடிப் பொழுதில்
மின்னலாய் பறந்து வந்து
என் இதயத்துக்குள் புகுந்து…

இம்சை செய்த
இன்பத்துப் பட்டாம் பூச்சி
நீ தானடி!

பள்ளிப் பூங்காவில்
என் படிப்பை
அடிக்கடி குழப்பித் திரியும்
பருவத்துத் தேரும் நீ தானடி!

நான்
என்ன பாவம் செய்தேன்…?

நரகம் பிடித்த நாளாய்
நகர்ந்த பகலிலும்…

கிரகணம் பிடித்த நிலவாய்
நீளும் இரவிலும்…

உனக்காய் ஏங்குகிறேன்
உன் நினைவில் வாடுகிறேன்!

துக்கம் நெஞ்சைப் பிழிய
தூக்கம் தொலைத்துக் கிடக்கிறேன்!

விழி மூடிக் கொள்ள முடியாமல்
விழித்துக் கொண்டு…

உன்னிடம்
காதல் பிச்சை ஏந்துகிறேனே…!

ஏன் இப்படி
என்னை வஞ்சித்தாய்…?

 
 *** இவள் - சத்தியா ***
user posted image

 

 

46 - ஒரு முத்தம்!

img187/5772/hhhkc5.png 

என் இதயத்துள் புகுந்த
இனிய தேவதையே!

உனது விழி வாசல்
கற்கண்டுப் பார்வையில்
எனை இழந்தவன் நான்!

சில காலமாய்
என் இதயத்துள் நுழைந்து
என் உயிர்வரை கலந்து
ஊசலாடிய உனக்காய்…

ம்!…
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்!
என் இதழ் பதித்து
இன்று உனக்காய் தந்துள்ளேன்!

இதோ எடுத்துக் கொள்
இன்றோடு நான்
உன்னுடன் கலந்து விட்டேன்!

*** இவள் - சத்தியா ***

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

47 - பாசவலை அறுத்தாயோ…?

user posted image

பாசவலை அறுத்தாயோ…?


கண் விழித்துப் பார்க்கின்றேன்
கண் எதிரே நீ!

கதை தொடுக்க முயன்றும்
கடிவாளம் போட்டவளாய்
மௌனித்து நிற்கின்றேன்!

ஓ!…
முட்டைகள் மீது
பின்னங் கால்களால்
மண் கிளறி மூடி விட்டு
திரும்பிப் பாராது செல்லும்
ஆமையைப் போலே…

பணம் குணத்தை மாற்ற
வசதிகளும் வாய்ப்புகளும்
வளர்ந்த நிலை மறக்க…

வந்த பாதை மறந்து
வாழ்ந்த வீடு கடந்து
விரைந்து செல்கிறாய் நீ!

உனைப் பார்த்ததும்
விக்கியழாக் குறையாக
விம்மி விழும்
மெல்லிய விசும்பல்கள்
என் நெஞ்சில் ஒலிக்கிறது!

இது பழகிய அடிதான்
என்றாலும்
மீண்டும் மீண்டும்
வலிக்கத்தானே செய்கிறது!

ம்…
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
ஓடும் ஒரே இரத்தத்தினுள்
எத்தனை
முரண்பாடுகள் பார்த்தாயா…?

போடா போ!
இனி என்ன…

நீ வாழ்ந்த இந்த இடத்தையும்…
நீ நேசித்த இந்தப் பூக்களையும்…
நீ அடிக்கடி பாடும்
அந்தப் பாடலையும் பாடிக் கொண்டு…

உன் நினைவுகளோடு
வாழ்ந்து விட்டுப் போகின்றேன்!

*** இவள் - சத்தியா ***

48 - தூறலில் உன் நினைவு!

user posted image

தூறலில் உன் நினைவு!

மழை தூறத் தொடங்கும் போதே
நான் நனைய ஆரம்பித்து விடுகிறேன்
உன் நினைவுகளில்!

சிறு சிறு
தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!

ம்…
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!

ஓ!…
என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!

என் நெஞ்சுக்குள்
இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!

ம்ம்…
நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…

பனித்துளிபோல்
பரிசுத்தமான உன் அன்பில்

இதுவரை
நனைந்த நினைவுகளோடும்…

இனி நனையப் போகும்
ஈர நினைவுகளோடும்…

நனைந்து கொண்டிருக்கிறது
இந்த மனசு!

*** இவள் - சத்தியா ***

« முந்தைய இடுகைகள்