233 – நீ !

அதிராத சிரிப்பு
உன் அனிச்சப் பேச்சு
உதிரும் வார்த்தையில்
உண்மையும் நேர்மையும்
என் உயிரோடு உறைய…

மயிலிறகாய் மனசு வருடி
உயிர் வரை ஊடுருவும்
உன் வார்த்தைகளால்
என் நாட்கள் நகர…

ஒருமுறை கண்டு
மறவாது துடித்து
மறுமுறை கண்டு
முக்குளித்து எழுந்து…

உள்நெஞ்சில் அப்பிப்போய்
உறைந்து கிடந்த
படிமங்களை எல்லாம்
உரித்தெறிந்து…

உன் பாதியில்
நான் நிறைந்து
என் பாதியில்
நீ நிறைந்து…

மழை நனைந்த பூவாய்
திகழும் என் மனசில்
நிறைந்த அழகாய்
கொஞ்சம் ஈரமாய்…

உயிரிலே நினைவுகள் தழும்ப
துயில்கொள்ளா இரு விழியும்
ரகசியமாய் எரிய…

அறுகம் புல்லில்
உறங்கும் பனித் துளியாய்
உயிரோடு உயிராகி – என்னுள்
உறைந்து கிடக்கிறாய் நீ!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10649

*** இவள் – சத்தியா ***

232 – ஏக்கம் !

நீ உன்
அன்னை மேல் காட்டிய அன்பையும்
தந்தை மேல் காட்டிய நேசத்தையும்
மனைவி மேல் காட்டிய காதலையும்
பிள்ளை மேல் காட்டிய பாசத்தையும் கண்டு…

என்னுள்ளம்
உள்ளே மெதுவாய் அழுதது.

உன் பிள்ளையாய் ஆவது
நான் பிறந்திருக்கக் கூடாதா என்று !

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10368

*** இவள் – சத்தியா ***

231 – வருவாயா…?



வருவாயா…?

அடிக்கடி
உன் நினைவுகள்
எனை நெருங்கி
ஓங்கி எரியவைக்க…

அன்பாய் அணைத்து
பாசம் தரும் தாகம்
என் நெஞ்சினுள் நிறைந்திருக்க…

ஒரு முறை கண்டு களித்து
விலகிய கண்களிரண்டும்
மறுமுறை உனை காணத்துடிக்க…

அம்மாவின் சேலை நுனி பற்றி
அலையத் துடிக்கும் குழந்தையாய்
உன் பின்னால்
அலைந்து திரிகிறது என் நேசம்!

ம்…
உன்மேல் உண்டான அன்பு
வேசமும் மறைப்புமில்லாமல்
நடிப்பும் பாசாங்குமில்லாமல்
சுயநலம் எதுவுமில்லாமல்
ஆழ்மனதின் அன்பின் ஊற்றாய்…

ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலே…

உனை
தேடிக் கொண்டிருக்கிறேன் நான்!

எங்கே…
நீயும் ஒரு முறை வந்து
அடை மழை பொழிவதாக
உன் அன்பை
பொழிந்துவிட்டுச் செல்லேன்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10325

*** இவள் – சத்தியா ***

230 – நினைவுகள் கூட சுகமே!


நினைவுகள் கூட சுகமே!


நான்
ஆசை ஆசையாய் வளர்க்கும்
அந்தப் பூஞ்சோலையின் நடுவே…

வாழ்க்கை வரம்பில்
கடந்து வந்த பாதைகளில்
தடம் பதிந்த நினைவுகளை
பக்கம் பக்கமாய்
மெல்லப் புரட்டிப் புரட்டி
பக்குவமாய் பல கதைகள்
கூறிக் கொண்டிருப்பாய் நீ!

கதை சொல்லியாய் நீயும்
‘ம்’ கொட்டி … ‘ம்’ கொட்டி
கதை கேட்பவளாய் நானும்…

கவலைகள் மறந்து
தனிமைகள் தொலைத்து
வெறுமைகள் கலைந்து
நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன்.

ஓ…!
அது ஒரு நிலாக் காலம்!

இப்போது கதை சொல்ல
நீயும் இல்லை
இனிமேல் கதை சொல்ல
நீ வரப்போவதும் இல்லை.

ம்…
நினைத்துப் பார்க்கிறேன்…

நேற்றைய காலம் என்பது
மரித்துப் போன காலமாய்…

நாளைய காலம் என்பது
நிச்சயமற்ற காலமாய்…

இந்த நிமிடம்
மட்டுமே நிரந்தரமாய்…

ஓ…
இன்று மீண்டும்
அதே தனிமை
அதே வெறுமையோடு நான்!

இனி என்ன
எஞ்சிக் கிடக்கும்
கொஞ்சக் காலம் வரை
மிஞ்சிக் கிடக்கப் போவது
நீ விட்டுச் சென்ற
அந்த நினைவுகள் மட்டுமே!

ம்ம்…
நினைவுகள் கூட சுகமே !!!


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10217

*** இவள் – சத்தியா ***


229 – உன்னதக் காதல்!

உன்னதக் காதல்!

பருவங்கள் பாராது
உருவங்கள் காணாது
உண்மையாய் மலர்ந்தது
உன்னதக் காதல்!

நம் மனப்பாறை இடுக்குகளில்
தேன் கூடு கட்டி
மௌனமாய்ப் பிறந்தது
உனக்கும் எனக்குமான
உயிர்ப்புள்ள காதல்!

காற்றின் இடுக்கில்
கசிந்து வழிந்து
குழைந்து குழைந்து
பிறந்த குழந்தை
இந்தக் காதல்!

நம் நான்கு விழிகள் சேர்ந்து
அன்று எழுதிய முதல் கவிதை
காதல்!

ம்…
நான் மெய் மறந்து
பொய் சொல்லவில்லை
இன்றும் உன்னை நேசிப்பதாய்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10113&st=0#entry141459

*** இவள் – சத்தியா ***

228 – காதல் செய்வாய்!

காதல் செய்வாய்!

இரண்டு மனதின் இணைப்பு
இன்ப இணைப்புக்கு அமுது
இதழ் பருகும் முத்தம்!!

பனிபடர்ந்த காலை
பக்கத்தில் நீ
பரஸ்பர வெப்பம்!

உச்சி பிளக்கும் வெய்யில்
உச்சுக் கொட்டும் வார்த்தை
உன் அணைப்பில் இதம்!

அந்தி மாலை நேரம்
அழகிய கடற்கரையோரம்
அன்புப் பிணைப்பில் கலப்பு!

நிலா ஒழுகும் இரவு
நிறைந்து வழியும் மௌனம்
நீ பாடும் பாட்டு!

கனிவு நிறைந்த பார்வை
கண் நிறைந்த காதல்
காதலா… நீ காதல் செய்வாய்!

*** இவள் – சத்தியா ***

227 – கவிதை என்றால்…

உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை
கொஞ்சம் கற்பனை கலந்து
நல்லபல சொற்களையும் சேர்த்து…

என் மனதுக்குள் உறைந்து
திறந்த அந்த விஷயம்
அதைப் படிப்பவர்களின் மனதிலும்
ஏதோ ஓர் தாக்கத்தை ஏற்படுத்தி
கண்முன் காட்சியாய் தோன்றி நிற்க…

அவர்கள் மனதுக்குள்ளும்
உறைந்திருந்த, ஒளிந்திருந்த
சில விஷயங்களைத் துருவி
திடீரென்று எதையெதையோ ஞாபகப்படுத்த…

மொழியின் லாவகத்தோடு
அதிகம் நீளாமல், சுருக்கமாக
இணைத்த சொற்களின் கோர்வையே கவிதை என்பேன். smile.gif

226 – யாரழுது யார் துயரம் மாறும்…?

யாரழுது யார் துயரம் மாறும்…?


விடியல்களை எழுப்பி
பகல்களை விரட்டி
பொழுதுகள் சாய்ந்து
ஆண்டொன்று முடிந்து போகும்
அந்த இரவின் மடியில்…

சாளரத்தை மெல்லத் திறந்து
வெளியே எட்டிப் பார்க்கிறேன்

வண்ணங்கள் சிதறச் சிதற
வந்து விழும்
வான வேடிக்கைகளும்…

மின்னியும், முழங்கியும்
ஆரவாரித்து வரும்
வெடிகளின் ஓசையும்…

புதிய ஆண்டை வரவேற்கும்
வாழ்த்து ஒலிகளுமாய்
என் காதைப் பிளக்கிறது.

அமைதியாய் நின்று
அனைத்தையும் பார்த்தவேளை
அப்பாவின் நினைவும்
அக்காவின் நினைவும் வந்து
அலைமோதிச் சென்றன.

அங்கே…
இயந்திரப் பறவைகளின்
எச்ச வீச்சில் விழும்
குண்டுகளுக்கும்…
போர்ப்பறை முழங்கி விழும்
செல்களுக்கும் நடுங்கி…

முகவரியைத் தொலைத்த முகங்களாய்
எந்தப் பதுங்கு குழியில்
பதுங்கிக் கிடப்பார்களோ…?

என்ற வேதனை மனதை வாட்ட
எதையுமே ரசிக்க மனமின்றி
படுக்கையில் விழுந்து
உருண்டு பிரண்டு
சற்று கண்ணயர்ந்த வேளை…

அதிகாலை நான்கு மணி
அலறிய தொலைபேசி அழைப்பில்
அடுத்த முனையில்
தளதளத்த குரலோடு
நலம் விசாரித்தபடி
என் அப்பா !!!

என்னப்பா…? என்னாச்சு…?
குரலெல்லாம் வித்தியாசம் என்றேன்.

“இல்லடா
பனிக் குளிருக்கு
குரல் அடைப்பு”… என்றார்.

வலிகளால்
அவர் விழிகள் நனைந்தபோதும்
என்னைச் சமாதானப்படுத்த
இப்படியெல்லாம் சமாளிக்கிறார்
என்பது எனக்கும் தெரியும்.

ஓ!… அப்படியா…?
என நானும் பொய்யாச் சிரித்து
உள்ளே அழுது துடித்து
அதை மறைக்க
வலிந்து நான் முயன்றபோது
மூச்சுத் திணறி
வார்த்தைகளும் தடுக்கி விழ…

அவிழ்ந்து விழுந்தன
கண்ணீர் முடிச்சுக்கள் !!!

ம்…
யாரழுது யார் துயரம் மாறும்…?

*** இவள் – சத்தியா ***

225 – என் தாயுமானவனே!



என் தாயுமானவனே!

வாழ்க்கைப் பாதையில்
மரத்துப் போன மனதோடு
வியர்த்துப் போன வரலாறு
என்னோடு இழுபட்டுக் கிடக்க…

உன் பாதச் சுவடுகளில்
தேங்கிக் கிடக்கும் மழை நீரில்
என் தாகம் தீர்க்க எண்ணி…

கால இருள் கிழித்து
மண்ணை விட்டு
விண்ணோக்கிப் பறந்து
மண்ணுக்கும் விண்ணுக்கும்
நூல் கொண்டு பாலமமைத்து…

என் விரல்களுக்குள்
விழுந்துவிட்ட வெண்மதியை
மெல்லெனவே மீட்டி
விளையாடிக் களித்த குழந்தையாய்…

வண்ணக் கனவுகளின்
வர்ணங்கள் கரையக் கரைய
அங்குலம் அங்குலமாய்
விழி மொழியால் உனை அளந்த
அந்தக் கருக்கல் பொழுதுகளோடு
கவிதைகள் கறந்து கறந்து
காலங்கள் நீள நீள…

மீண்டும்
உன்னைத் தரிசிக்கும் ஆவல்
என்னைத் தொல்லை செய்ய…

ஓ…
என் தாயுமானவனே!

என்றோ ஓர் நாள்
நீ தலை தடவும் வேளைகளில்
என் தலைப் பாரம் நீங்கி
தாகங்கள் தீர்ந்து…

வாழ்வின் பூரணப் பக்கம் ஒன்று
உனக்கும் எனக்கும் வசப்படும்
என்னும் எண்ணத்தோடு
நாட்களை நகர்த்தி நகர்த்தி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்!

*** இவள் – சத்தியா ***

224 – நினைவில் ஒரு தாலாட்டு!

நினைவில் ஒரு தாலாட்டு!

கார்மேகம் கலைந்த
காலைப் பொழுதில்
கதிரவன் ஒளிபரப்பி நிற்க…

ஜன்னல் திறந்து
நீட்டிய என் கரங்களில்
தூரத்தில் இருந்து
துள்ளி வீழ்ந்தது
ஓர் சின்ன மழைத் துளி !

ஓ… !
என் உயிருக்குள்
உறைந்த உயிரே !

உனை ஒரு முறை தரிசிக்க
இத்தனை வருட காலத்தவமா
இருக்க வேண்டும் நான்…?

ம்…
நெட்ட நெடுநாளாய்
நெஞ்சு விட்ட பெருமூச்சும்…

கருக்கல் பொழுதுகளில்
கலைந்த கனவுகளும்…

இன்று
என்னெதிரே தோன்ற
கண்குளிரப் பார்க்கின்றேன் !

கலைந்த கனவுகள்
நிஜங்களாய் மாற
கவிதையே என் கரங்களுக்குள் வீழ
உறவுக்காய் என் விழிகள் ஏங்க
கண்மூடிய கணப் பொழுதில்…

சில்லெனத் தீண்டி
என் தேகக் கூட்டுக்குள்
மின்சாரம் பாய்ச்சி
நாடி நரம்புகளை அதிர வைத்து
எனை மறுபடி பிறக்க வைத்து
விடைபெற்றுச் செல்கின்றாய்!

ம்…
மீண்டும்
என்றாவது ஒரு நாள்
என் துடிப்புள்ள இதயம்
உன் மடியில்
உயிர்ப்புள்ள பூ பூக்கும்
என்ற நம்பிக்கையோடு…

உன்னோடு கலந்திருந்த
ஒவ்வொரு நிமிடக் கடப்பிலும்
சம்பவங்களின் புரிதலிலும்
சத்தமின்றி, சலனமின்றி
சந்தமொன்று மெல்ல எழ
அந்த அற்புதமான இசையை
என் ஆன்மா மீட்டிக் கொண்டிருக்க…

அமிழ்ந் தெடுத்த முத்துக்களை
அள்ளி முத்தமிட்ட படி
தென்னையின் பாலை பின்னி
தொட்டிலாக வடிவமைத்து
சுகங்களையும், சோகங்களையும்
தாலாட்டிச் செல்கின்றேன்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9437&hl=

*** இவள் – சத்தியா ***

« முந்தைய இடுகைகள் அடுத்த பக்கம் » அடுத்த பக்கம் »