070 – நிலாவே வா …

 

நிஜமான நேசம் கொண்டு
உனை நெஞ்சார நேசித்தேன்…!

நீதான்
உண்மையான நேசம் தன்னை
உணராமல் செல்கின்றாய்…!

சரி விடு…
கற்பக் கிரகத்துள்
இருக்கும் கடவுளை
கட்டித் தழுவியா
வணங்க முடியும்…?!

எட்டி நின்றுதானே
எப்போதும் வணங்குகிறோம்…?

அது போலவே
எட்டி இருந்தபடியே
உன்மேலான
பிரியங்களை எல்லாம்
என்றும் பிரியாமல்
என் நெஞ்சுக்குள்ளேயே
வளர்த்துக் கொள்கிறேன் நான்…!

நிசப்தம் – சத்தியா

 

படம்  – மௌன ராகம்.
பாடல்  – நிலாவே வா செல்லாதே வா …

*** இவள் – சத்தியா ***

089 – ரோஜா ஒன்று …

ஓ…!
முத்தம்..!
முதல் முத்தம்…!

உண்மையில்
முதல் முத்தம்
இத்தனை சுகமானதும்
இனிப்பானதும் தானா…?

ம்ம்…
நீ முத்தமிடும் போதுதான்
முதன் முதலாய்
உணர்ந்து கொண்டேன்…

அடடா…!
முத்தத்தில் கூட
இத்தனை தித்திப்பா என்று…!?

நிசப்தம் – சத்தியா

படம்  – komberi mookan
பாடல்  –   ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் …

*** இவள் – சத்தியா ***

277 – காதல் ரோஜாவே…

 

என் நெஞ்சாங் கூட்டில்
உன் நினைவுக் கொப்பளங்கள்
உடைந்து இரத்தம் வடிய
பிணிகொண்டு எழுந்து
துடிக்கிறது இந்த உயிர்…!

என்னானதோ ஏதானதோ
என எண்ணி எண்ணி
நெஞ்சுக்குள் பிரளயமாய்
வெடித்துச் சிதறும்
எண்ணப் பின்னல்களோடு
விம்மி வெடித்து
சிதறுகிறது இந்த மனசு…!

ம்… நகர மறுக்கும்
நரகப் பொழுதுகளோடு
போராடிப் போராடி
உன் நேச வார்த்தைக்காக
இன்றும் காத்திருக்கிறேன் நான்…!



படம் – ரோஜா.
பாடல் – காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே…

 

*** இவள் – சத்தியா ***

171 – புது வெள்ளை மழை…

ஏழை
பணக்காறன்
என்ற பேதம் தவிர்த்து
யாவரும் ஒரே தரம் என்று…

பள்ளிப் பருவத்திலே
பிள்ளைகளின் மத்தியிலே
பாடசாலைச் சீருடையாய்
வெள்ளை ஆடை இருந்தது அங்கே…!

குடிமனை மீதினிலே
கொட்டிய வெண்பனியால்…

ஏழையின் இல்லமும்
எஜமானின் மாளிகையும்
சரிசமம் என்றது இங்கே…!

ம்ம்… இருப்பினும்…
கொட்டும் பனி மழையில்
உடல் விறைக்கும் போதெல்லாம்
மனதுள் விரட்டி அடித்து
விரல் கோர்க்கத் துடிகிறது
உன்னோடு என் நினைவுகள்…!

நிசப்தம் – சத்தியா

படம் – ரோஜா :
பாடல் – புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது …


*** இவள் – சத்தியா ***

049 – நான் தேடும் செவ்வ…

 

பறந்து வரச் சிறகிருந்தும்
நீ பறந்து வராமல்
உன் இறக்கைகளை
ஒடுக்கிக் கொண்டு
என்னை மட்டும்
பற பற என்கிறாய்…!

என் முறிந்த சிறகுகளோடு
நான் எப்படிப் பறப்பேன் சொல்…?

இருப்பினும்…
என்றாவது ஓர் நாள்
நானும் கூட
என் இறக்கைகளை விரித்து
உன்னிடம் பறந்து வரலாம்…!

அதுவரை
உன் அன்பு மழையில்
நனைந்துகொண்டிருக்கும் வாய்ப்பை
எனக்குத் தவறாமல் கொடு
அது போதும் எனக்கு…!

 

நிசப்தம் – சத்தியா

 

 

படம்  –  Dharma Pathini:
பாடல் –   நான் தேடும் செவ்வந்திப் பூவிது …

 
*** இவள் – சத்தியா ***

376 – காதல் வந்தும் சொல்…

 

வரண்டு போன பூமி
வானத்தைப் பார்த்து
ஏங்குவது போல்…

தத்தெடுப்பார் யாருமின்றி
தனித்துப் போய்
உன்னையே எதிர் பார்த்து
வதங்கிச் சாகிறது இதயம்…!

உன் நினைவுகளை எல்லாம்
மூட்டை கட்டி
வலிந்து முயன்று
வெளியே தள்ள முயன்றும்
தோற்றுப் போய் விட்டேன்…!

உயிரே…!
ஓர் உண்மை சொல்லேன்
இப்போதும்
நீ என்னை நேசிக்கிறாயா…?

உன் மௌனப் பாஷைகளால்
மரண வேதனை தரும் வலியை
தொடர்ந்தும் எனக்குத் தராதே…!

என் அழுத விழியின் ஓரத்தில்
குளிர்ந்து விழும் பனித்துளியாய்…

உன் மௌனங்களை உடைத்தெறிந்து
மறுமொழி ஒன்று சொல்லி விடு…!

நிசப்தம் – சத்தியா

 

 

படம்  –  
பாடல் –  காதல் வந்தும் சொல்லாமல்…
*** இவள் – சத்தியா ***

349 – பூங்காற்றிலே உன்…

நிலா நனைந்த இரவில்
நிழலாய்ப் போன
உன் தரிசனங்களாலே
ஊமையாகிப் போன
நேசக் குயிலொன்று
நினைவுகளை மீட்டிக்கொண்டு
முகாரி இசைக்கின்றது…!

உலர்ந்த உதடுகளுடன்
உருக்குலைந்த உள்ளத்துடன்
உறக்கம் தொலைத்த விழிகளுடன்
வானத்தை வெறித்தபடி…

சின்னக் கண்ணுக்குள்
சிறுகச் சிறுகக் கட்டிய
சின்னஞ் சிறு ஆசையெல்லாம்
சிந்தி விழும் கண்ணீரோடு
சிதறுண்டு கரைய…

ஏதோ தொலைந்து போனதாய்…
இல்லை இல்லை
எதையோ தொலைத்து விட்டதுவாய்…
சோகம் முட்டி மோதி
தொண்டை வரை சிக்கிக் கொள்ள
உனை திக்கெங்கும் தேடுகிறேன்…!

நிசப்தம் – சத்தியா


 

படம்  –  உயிரே.
பாடல் –   பூங்காற்றிலே உன் சுவாசத்தை …



*** இவள் – சத்தியா ***

375 – முன் அந்தி சாரல் நீ…

 

எந்த ஜென்மத் தேடலாய்
நீ எனக்குக் கிடைத்த
வரமோ தெரியவில்லை…!

இரு விழியால்
எனைக் கொய்து
இதயத்தை இம்சை செய்து…

சின்ன இடியாய்
செல்ல மழையாய்
சிறுகச் சிறுக என்னை
நீ சித்திரவதை செய்யும் போது…

உனக்குள் தொலைவதிலும்
உனக்காய் என் விழிகள் அழுவதிலும்
நிலவை முட்டும் சந்தோசம் எனக்குள்…!

 

நிசப்தம் – சத்தியா

 

 

படம்  –  7 ஆம் அறிவு .
பாடல்  –    முன் அந்தி சாரல் நீ …

*** இவள் – சத்தியா ***

263 – கோபமா என் மேல்…

நரகம் பிடித்த நாளாய்
நகரும் பகலிலும்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீளும் இரவிலும்
என் பொழுதுகள் கழிய…

எதிலும் நாட்டமின்றி
ஏதோ கட்டாயத்துக்காய்
உடல் மட்டுமே
இங்கு இயங்குவது
போன்றதொரு உணர்வு…!

என் உலகமே
நீ என்றிருந்தேன்
நீயும் உதறி விட்டால்…

அன்பு காட்ட
யாருமற்றுப் போன
இந்த வாழ்வில்
நீயும் திரும்பிக் கொண்டால்…

இன்னும்
எதை வேண்டிக் கிடக்கிறதோ
இந்த உடலும், உயிரும்….?

நிசப்தம் – சத்தியா

படம்  –  உன்னுடன்.
பாடல் – கோபமா என் மேல் கோபமா  …
*** இவள் – சத்தியா ***

374 – உன் சிரிப்பினில்…

உறக்கமற்ற இரவினில்
இமைகளை வருடும் தென்றலே…!
எதிர்பாராத தருணங்களில்
என் தேகம் நனைக்கும் சாரலே…!

விழித்தபடியே இரவைக் கழித்து
முழித்துக் கிடந்து உன்னழகை ரசித்து
அழகிய பார்வையின் வெம்மைக்குள்
என்னை முழுமையாக உட்படுத்தி…

மௌனமாய் நீ உதிர்க்கும்
சின்னச் சின்னப் புன்னகையில்
என்னையே நான் தொலைத்திருக்க…

நிசப்தங்கள் சத்தங்களாகி
முடிச்சவிழும் நேரத்திலும்
உன் அன்புப் பிடிக்குள்
நான் அகப்பட்டுக் கிடக்க…

சலனங்கள் எதுவுமின்றி
சட்டெனப் பிறக்கிறது
புத்தம் புதிய காலை…!

நிசப்தம்  – சத்தியா

படம்  –  Pachaikili Muthucharam.
பாடல் –  உன் சிரிப்பினில்  உன் சிரிப்பினில்

*** இவள் – சத்தியா ***

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers