71- நெஞ்சோடு ஒரு நினைவு!
மே 15, 2008 இல் 10:33 பிற்பகல் (71- நெஞ்சோடு ஒரு...)
Tags: 71- நெஞ்சோடு ஒரு...

நெஞ்சோடு ஒரு நினைவு!
பலமாய் அடித்து ஓய்ந்த
மழைக்குப் பிறகு
துளித் துளியாய்
தூறல் போட்டுக்
கொண்டிருந்தது வானம்!
அடுத்த மழை
அடிக்கத் தொடங்குமுன்பே
விரைந்துவிடத் துடித்து
விறுவிறுவென நடக்கிறேன் நான்.
அந்தச் சாலையோரத்து
மரத்தின் கிளையினை
யாரோ உலுப்பிய உலுப்பில்
சிதறி விழுந்த தூறல்கள்
என்னை நனைக்க…
நானும்
அண்ணாந்து பார்க்கின்றேன்.
அங்கே
பலத்த மழையில்
நனைந்து தோய்ந்து
பறந்துவந்த புறாவொன்று
சட்டென அந்த மரத்தில் அமர்கிறது!
ஓ!…
புறாவாரே!
இப்படித்தான்
முன்பெல்லாம்
என் அண்ணன் கூட…
மழை ஓய்ந்த பின்
மரக்கிளையினை உலுப்பி
எனைத் தெப்பமாய் நனைத்து…
நான் மயிர்க் கூச்செறிந்து
சிணுங்கி நிற்கும்
அழகை ரசிப்பதில்
அலாதிப் பிரியம் அவனுக்கு!
ம்…
அன்று அவன்!
இன்று நீ!
என…
அங்கே வந்தமர்ந்த
அந்தப் புறாவோடு…
உறவிழந்த வலியோடு
என் நினைவுக்குள்
கண்ணாமூச்சி காட்டிச் சென்ற
சுயமிழந்த சேதியினை
நேசத்தோடு பேசிச் செல்கிறேன்!
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8915












