255 – யார் யாரோ நான்…

யாரேனும் ஆறுதலாய்
என் தோள் தொடுவார்களா…

யார் விரலேனும்
என் விழி நீர் துடைக்குமா…

என்ற ஏக்கங்களுக்கெல்லாம்
உன் விரல் கொண்டு
என் விழி நீர் துடைத்து
முற்றுப் புள்ளி வைத்தது நீ!

எத்தனையோ பேரை
இதுவரை நான் கடந்துவந்தும்
உன்னைப் போல் யாரும்
என்னுள் நிறைந்ததில்லை!

அன்பே!
நீ இல்லாமல்
இனி நான் எங்கே…?

என் உயிரினுள்ளே
சுமக்கும் உன்னை
ஒரு போதும் இழக்கமாட்டேன்.

படம் – சின்னா.
பாடல் – யார் யாரோ நான் பார்த்தேன்… smile.gif

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=150906&st=20&#entry150906

*** இவள் – சத்தியா ***

254 -அன்பே அன்பே நீ…

 

அன்பே…!
தோள் சாய்ந்தபோது
தோழமையாய்த் தந்த
உன் தோள்கள்…

காதலோடு கனிகையிலே
முகம் புதைக்கத் தந்த
உன் நெஞ்சம்…

மடி சாய்ந்தபோது
ஆறுதலாய் தலைகோதிய
உன் விரல்கள்…

ஓ…!
இன்பத்தில் மகிழ்வாய்
துன்பத்தில் துணையாய்
பொல்லாத வேளையில்
துணைநிற்கும் பெருந்தூணாய்
எப்போதும் எனக்கு நீ…!

ம்ம்…
கண் திறந்து பார்க்கிறேன்
உலகம் தெரிகிறது
கண்மூடிக் கொள்கிறேன்
நீயே தெரிகிறாய்…!

படம் – உயிரோடு உயிராக.
பாடல் – அன்பே அன்பே நீ என் பிள்ளை…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=150745&st=20&#entry150745

*** இவள் – சத்தியா ***

253 – பார்க்காத என்ன பார்க்காத…

எங்கிருந்தோ வந்து
மின்னலாய் மின்னி
கண்ணிலே நிறைந்து
உன் பார்வையால்
எனைக் கொன்று…

தூரமாய் நின்றுகொண்டு
உன் இரு கைகளை நீட்டி
வா.. வா… என் செல்லமே!
என்று விழி மொழியால்
எனை அழைக்கிறாய்!

ஓ…!
விழி முழுவதும் ஊறி
நதியாகி வழிகின்ற
தீராக் காதலோடு
கால்கள் முன்னோக்கி நகர
மனமோ பின்னோக்கி நகர…

பூகம்ப நிலவெளியில்
புதைந்து விட்டாற் போல்
புதைந்து தவிக்கிறேன் நான்!

படம் – ஆறு
பாடல் – பார்க்காத என்ன பார்க்காத…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&st=20#entry150544

*** இவள் – சத்தியா ***

252 – ஏன் எனக்கு மயக்கம்…

என் இதயப் பூங்காவில்
நீ கால் வைத்து
கடந்து சென்ற போது…

கண்களைத் திருடிவிட்டு
என்னைக் குருடாக்கி
உன் சுவடுகளை
என்னுள் விட்டுச் சென்றாய்!

உன் மௌனவிழிகள் பாடிய
காதல் தாலாட்டில்
கிறுக்குப் பிடித்து
தடுக்கி விழுவதும்
விழித்தெழுவதுமாய்..

சிறகடித்துச் சிறகடித்து
உனக்குள்ளேயே
அடைபடத் தவிக்கிறது மனசு!

ஏய்! … ஏய்!
ஏன் இந்த மயக்கம்?
ஏன் இந்தத் தவிப்பு?
உனக்கேதும் புரிகிறதா…???

படம் – நான் அவனில்லை.
பாடல் – ஏன் எனக்கு மயக்கம்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=150344&st=20&#entry150344

*** இவள் – சத்தியா ***

251 – ஒ நெஞ்சே நெஞ்சே…

உன் வாழ்க்கைப் பாதையில்
நிமிடமுட்கள் நகர்ந்து தந்தது
காயங்களோடு தோல்விகளுமாய்
காலத்தின் கட்டளையாக!

ஓ…!
சூட்சும உலகினில்
சூழ்நிலைக் கைதியாக
உனை அடைத்து வைத்தது
எந்த விதி என்று
எனக்கும் தெரியவில்லை!

கலங்காதே உயிரே…!

காயப்படும் மூங்கில்தான்
கானம் பாடுகிறது!
காயப்படும் ஓலைதான்
சுவடியாகிறது!
காயப்படும் கற்கள்தான்
சிற்பமாகிறது!

என் அன்பே…!
எம் இமைகளுக்குள் வழிவது
உண்மையான நேசம்
ஆதரவாய் உனை அணைக்க
ஆருயிராய் நான்!

வா வா நீயும்
அணைத்துக் கொண்டே எழுவோம்!

 


படம் – முகவரி .
பாடல் – ஒ நெஞ்சே நெஞ்சே…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&st=20#entry150030

*** இவள் – சத்தியா ***

250 – வசீகரா என் நெஞ்சினிக்க…

உன் அழகு நிறைந்த
இதய மயிலின்
அழகான தோகை விரிப்புகளால்
சிலிர்த்தெழுந்த உணர்வுகளோடு…

மழையில் நனைந்து நனைந்து
உன் அன்புப் பிடியில்
கரைந்து தொலைந்து
என் ஆசைத் துடுப்புகளோடு
உன் இதயம் கண்டு பிடித்து…

உயிர் உறிஞ்சி
உறக்கம் தொலைத்து
காதலில் கனிந்து…

இதயப் புனிதங்களால்
இதயத்தைக் கரைத்தெடுத்த
அந்த நிமிட நினைவுகள்
சொட்டுச் சொட்டாய்க்
கொட்டக் கொட்ட…

எப்போதும்
என்னருகில் நீ வேண்டுமென்று
ஏங்கித் தவிக்கிறது இந்த மனசு!


படம் – மின்னலே.
பாடல் – வசீகரா என் நெஞ்சினிக்க…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149606&st=20&#entry149606

*** இவள் – சத்தியா ***


249 – சுற்றும் விழிச் சுடரே…

நீ என்னிடம் தந்த
உன் புகைப்படத்தின் பிம்பம்
எப்போதும்
என் விழியின் ஓரத்தில்
உரசிச் செல்ல…

தூங்கும் போது மட்டுமல்ல
தும்மும் போதும் கூட
உன்னைத் தானே
என் மனம் நினைத்துக் கொள்கிறது!

ம்ம்…
மரங்கொத்திப் பறவையாய் – நீ
மனம் கொத்திப் போனதிலிருந்து…

உன்னை விட்டு
விலகவும் இயலாமல்
விடுபடவும் இயலாமல்…

ஒரு எண்ணக் கோட்டுக்குள்
அந்த எல்லைக் கோட்டுக்குள் வீழ்ந்து
உன்னைத்தானே நான்
உலகமாய் சுற்றிச் சுற்றி வருகிறேன்!

படம் – கஜனி.
பாடல் – சுற்றும் விழிச் சுடரே…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149510&st=20&#entry149510

*** இவள் – சத்தியா ***


248 – மேகத்தில் ஒன்றாய்…

பிரிவுகளின்
வலி மிகுந்த
இந்த வேளையில்…

உனது பிரிவைத் தாங்காது
எனது உள்ளம்
மெதுவாக அழுகிறது!

நீ அருகில் இல்லாத
நொடிகள் எல்லாம்
யுகமாய் வலிக்க…

காயங்களால் ரணப்பட்டு
கொந்தளித்துப் போகிறது
இந்த மனம்!

ம்…!
இந்தச் சின்ன இதயம்
பிழியும் சோகங்களை எல்லாம்
எந்த ஆறுதல்கள் அமைதிப்படுத்தும்…?

படம் – காதல் சடுகுடு.
பாடல் – மேகத்தில் ஒன்றாய் நின்றோமே…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149362&st=0&#entry149362

*** இவள் – சத்தியா ***

247 – உன்பேரைச் சொன்னாலே…

 

உள்ளத்து உணர்வுகள்
உன் உணர்வால்
எனை மெல்ல அணைத்துக் கொள்ள…

நீ வரும் வழி பார்த்து
என் விழிகள்
வழியில் தவம் கிடக்கின்றன!

அமைதியாய் நானிருந்து
அன்போடு உனை நினைத்து
உருகும்
ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும்
நீயாக நிறைய…

ஒவ்வொரு பொழுதுகளிலும்
என்னருகில் நீ வேண்டும்போல்
என் மனம்
வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது!

ம்!
என் மன வானில்
எப்போது
நீ பெளர்ணமியாவாய்…?


படம்:-  டும் டும் டும்.
பாடல்:-  உன்பேரைச் சொன்னாலே…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149244&st=0&#entry149244

*** இவள் – சத்தியா ***


 

246 – நிலா நீ வானம் காற்று…

 

அதோ…
மேகத்தின் மேனியில்
மெல்ல மறைந்தபடி
ஓர் அழகிய மஞ்சள் நிலா!

அது என் தேகமெங்கும்
வழிந்தோட வைக்கிறது
நின் ஞாபகங்களை!

இதோ…
துளித் துளியாய் வந்து
விழுகிறது மழைத் துளி!
அது உன் அருகாமையை
என்னருகில் அழைத்து வந்தது!

இப்படியே
மலர்கிற … மறைகிற
ஒவ்வொரு நொடியிலும்
எனை நீ இம்சை செய்ய…

மதம் மறந்து…
மனம் தொலைத்து…
தீராத காதலில் மூழ்கி…
தினம்தோறும் தேய்கிறேன் நான்!

படம் : பொக்கிஷம்.
பாடல் : நிலா நீ வானம் காற்று…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&st=0#entry148765

*** இவள் – சத்தியா ***


« பழைய வரவுகள்